டெல்லி பெரியார் மையம் அமைய உதவிய வைகோ, வாஜ்பாயை மறக்கவில்லை – திராவிடர் கழகம்
சென்னை: டெல்லியில் பெரியார் மையம் அமைவது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் செய்த உதவிகளை திராவிடர் கழகம் மறக்கவில்லை, நன்றிக்கடன்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
டெல்லியில் நேற்று பெரியார் மையத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால் பெரியார் மையம் அமைய பேருதவியாக இருந்த வாஜ்பாயையும், தன்னையும் திராவிடர்கழகம் மறந்து விட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் குறை கூறியிருந்தார்.
இதற்கு திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரியார் மையம் அழைப்பிதழோடு தனிக் கடிதம் வைத்து நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று வைகோவின் அலுவலகத்தில் டெல்லி பெரியார் மைய திறப்பு விழா அழைப்பிதழ் அளிக்கப்பட்டது.
மேலும் சில தினங்களுக்கு முன்புகூட பெரியார் மையம் தொடர்பான அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பதிவு செய்துள்ளார்.
பெரியார் மையம் அமைய உதவிய வாஜ்பாயையும், வைகோவையும் நாங்கள் மறக்கவில்லை. மாறாக என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications