பார்வதி அம்மாளுக்கு சிறந்த சிகிச்சையை தமிழக அரசு வழங்க வேண்டும்- பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை
சென்னை: பார்வதி அம்மாளுக்கு தனது செலவில் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ள தமிழக அரசு, அந்த சிகிச்சை சிறந்த முறையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற இந்தியா வந்தபோது விமான நிலையத்தில் இருந்தபடியே அவரை திருப்பி அனுப்பிய மத்திய, மாநில அரசுகளின் மனிதாபிமானமற்ற போக்கை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் வழி காண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பார்வதி அம்மாள் பாதுகாப்பு கருதி அரசின் அரவணைப்பில், அரசு செலவில், அரசு குறிப்பிடும் மருத்துவமனை யில் சிகிச்சைப் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யும். இதற்கான அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கிறேன். அதற்காக எனது பாராட்டுதல்களை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும். பார்வதி அம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுவிட மத்திய அரசு காரணமாக இருந்துவிடக்கூடாது.
அதேநேரத்தில் பார்வதி அம்மாள் தொடர்பான மருத்துவ ஏற்பாடுகளை தமிழக அரசே மேற் கொள்ளப்போவதாக அறிவித்திருப்பதால், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தரம் மிக்கதாக இருப்பதையும், பாதுகாப்பானதாக இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மிக முக்கிய பொறுப்பை அரசு ஏற்றிருக்கிறது. எனவே அரசு இந்த விஷயயத்தில் மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
இதில் எவ்வித சிறிய தவறுக்கும் இடம் அளித்துவிடக்கூடாது. அரசின் அலட்சியத்தாலோ, வேறு காரணங்களாலோ ஒரு சிறிய தவறு நேரும் என்றாலும் அது தமிழக அரசுக்கு நீங்காத அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.