குடிபோதையில் போலீஸ்காரரை வெட்ட முயன்ற 3 பேர் கைது
திட்டக்குடி: திட்டக்குடியில் குடிபோதையில் போலீஸ்காரரை அரிவாளால் கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று இரவு சாப்பிடுவதற்காக பெரம்பலூர் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த ஓட்டலில் குடிபோதையில் வந்த ஆறு பேர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓட்டலில் தகராறு செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் வந்த இண்டிகா கார் அரியலூர்- திட்டக்குடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியிருந்தாக கூறப்படுகின்றது.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சுக்கு வழி விடுமாறு போலீஸ்காரர் முருகானந்தம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த ஆறு பேரும் முருகானந்தத்திடம் தகராறு செய்துள்ளனர்.
மேலும், காரிலிருந்து வீச்சரிவாளை எடுத்து கொலை வெறியுடன் வெட்ட முயன்றனர். முருகானந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு, அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். கும்பலை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோட முயன்றனர். அதில் மூன்று பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற மூன்று பேரும் காரில் தப்பிச் சென்றனர்.
போலீஸ்காரர் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் பாக்கியராஜ், பிரபாகரன், கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பெரம்பலூர் மாவட்டம் ஆடுதுறை விமல் என்ற விமல்ராஜ், பென்னகோணம் வாசு, முருகன் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications