காலாவதி உணவுகளை விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
சென்னை : காலாவதி உணவுப் பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்தார்.
காலாவதி உணவுப் பொருள் விற்பனை தொடர்பாக சட்டசபையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம்...
சேகர்பாபு (அ.தி.மு.க.) - அதிர்ச்சியின் உறைவிடமாய் சென்னை மாறி வருகிறது. காலாவதியான உணவுகளால் ஏழை மக்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை விற்று கொள்ளை அடிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கும் வகையில் இந்த கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டங்களை திருத்த வேண்டும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) - சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய நிறுவனங்கள்தான் காலாவதியான உணவுகளை விற்கின்றனர். அவர்கள் மீதும் சட்டம் பாய வேண்டும்.
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) - உணவு பாக்கெட்டுகள் மட்டுமல்ல தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்களில் கூட இதுபோன்ற நிலையை காணமுடிகிறது.
விவாதத்திற்குப் பதிலளித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,
சென்னை வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. சாலை 4-வது சந்தில் உள்ள ஒரு கிடங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தொலைபேசி மூலம் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் 30.4.10 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனையின் போது கிடங்கு பூட்டப்பட்டு இருந்தது. உரிய தகவல் அளித்தும் கிடங்கை வாடகைக்கு எடுத்துள்ள துரைப்பாண்டி வரவில்லை. எனவே அங்கிருந்த பத்திரிகை-டி.வி. நிருபர்கள், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் அந்த கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு கிடங்கு சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு காலாவதியான அரிசி, துவரம்பருப்பு, மிளகாய் ஆகிய உணவுப் பொருட்களும் தேயிலை, புளி, சாக்லேட் மற்றும் சோப்பு, பவுடர், பிஸ்கட், பேஸ்ட் போன்ற பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
பொதுமக்களிடம் கேட்டபோது, டேமேஜான' பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்துவருவதாக துரைப்பாண்டி கூறியதாக அவர்கள் குறிப்பிட்டனர். மக்களின் உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் இதர பொருட்களையும் இந்தக் கிடங்கில் வைத்து துரைப்பாண்டி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்னிலையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 47 வகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. துரைப்பாண்டி மீது இந்திய தண்டனைச் சட்டம், உணவு கலப்பட தடுப்புச் சட்டம் ஆகிவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க, ராயபுரம் மண்டல உதவி ஆணையரால் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெகன், சுடலை ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வியாபாரத்தை நடத்திய துரைப்பாண்டியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் காலாவதியான உணவுப் பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அதன் விளைவாக கோவை மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அனைத்து இடத்திலும் அரசே இந்தத் தவறுகளை கண்டுபிடிக்க சாத்தியக் கூறுகள் இல்லை. பல கடைகள் நடத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு இருந்தால்தான் அவற்றை தவிர்க்க முடியும்.
மாவட்ட அளவில் நுகர்வோர் மன்றங்கள் இருப்பதைப் போல் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் அமைத்து கலப்பட பொருட்கள் பற்றி பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக இல்லை. இதுதொடர்பாக உள்ள சட்டங்களை கடுமைப்படுத்துவது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். நீங்களும் மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அரசு இதை தட்டிக்கழிப்பதாக கருதக் கூடாது.
காலாவதியான பொருட்களை ரீ பேக்' செய்து விற்பனை செய்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, எந்த பன்னாட்டுக் கம்பெனியில் இவர் வாங்கி இருக்கிறார் என்பதையும் கண்டறிந்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications