தீவிரவாதப் பயிற்சி பெற்றேன் – யு.எஸ்.சில் சிக்கிய பாக். நபர் ஒப்புதல்

நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உரிய நேரத்தில் செயலிழக்க வைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் கனக்டிகட்டில் வசித்து வரும் பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசல் சஷாத் என்பவருடைய கார் அது என்று தெரியவந்தது.
இதையடுத்துஎப்.பி.ஐ. அதிகாரிகள் வழக்கை கையில் எடுத்தனர். அமெரிக்க விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. விமானம் மூலம் துபாய் செல்ல முயன்ற சஷாத்தை எப்ஐபி அதிகாரிகள் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர் சஷாத் என்பது தெரிய வந்துள்ளது.
நேற்று எப்பிஐ சார்பில் நியூயார்க் கோர்ட்டில் நீதிபதி நாதனியல் பாக்ஸ் முன்பு சஷாத் மீது புகார்ப் பதிவு செய்யப்பட்டது. அதில், குண்டு பொருத்தப்பட்டிருந்த தனது ஸ்போர்ட்ஸ் காரை கனக்டிகட்டிலிருந்து நியூயார்க்குக்கு சஷாத் ஓட்டிச் சென்றார். காரை டைம்ஸ் சதுக்கத்தில் நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.
துபாய் செல்ல முயன்றபோது ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது டைம்ஸ் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டுகளை வைத்த்து நான்தான் என்பதை சஷாத் ஒத்துக் கொண்டார். அமெரிக்கர்களைக் கொல்லவும், பீதியில் ஆழ்த்தவும் இந்தத் திட்டத்தை தீட்டியதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் வெடிகுண்டுகள் தயாரிப்பு தொடர்பான பயிற்சியைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்று எப்பிஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் கூறுகையில், விசாரணைக்கு சஷாத் முழு ஒத்துழைப்பு தருகிறார். பல உபயோகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications