வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லி சென்று திட்டக்குழுவுடன் பேசிய பிறகு, தமிழ்நாட்டிற்கு 2010-2011-ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடாக ரூ.20,068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டைவிட ரூ.2,600 கோடி அதிகம் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
மேலெழுந்த வாரியாக பார்க்கின்ற பொழுது இது ஏதோ மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தனது நிதியிலிருந்து ஒதுக்கியது போல தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் சேர்ந்து தங்களது நிதியில் மொத்தமாக செலவழிப்பது தான் இந்த திட்ட ஒதுக்கீடாகும். இதில் தமிழ்நாடு அரசின் பங்கு எவ்வளவு, மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்று தனித்தனியே விவரங்களை தந்திருக்கலாம்.
மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற, மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை உயர்த்தி தமிழ்நாடு அரசு கூடுதலாக எவ்வளவு நிதிதிரட்ட திட்டக்குழுவிடம் ஒப்புக்கொண்டிருக்கிறது என்ற விவரங்களையும் தந்தால் மக்கள் மீது எவ்வளவு கூடுதல் சுமை ஏற்றப்போகிறார்கள் என்பதும் தெரிந்திருக்கும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தான் படுமோசம். வெறும் 4 சதவீதத்தைக்கூட எட்டவில்லை. உலக பொருளாதார தேக்கம் என்று தி.மு.க. அரசு சமாதானம் சொல்லுகிறது. இந்த தேக்க சூழ்நிலையில் ஒட்டுமொத்த இந்தியா 8.5 சதவிகிதம் வளர்ச்சி காண்கின்ற பொழுது, தமிழ்நாடு அதில் பாதியைக் கூட எட்டவில்லை என்பது பரிதாபத்திற்குரியது.
மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் இதையே சுட்டிக்காட்டி இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக வளரவேண்டிய தமிழ்நாடு, படுபாதாளத்தில் விழுந்துகிடக்கிறதே என்று இடித்துக் காட்டியுள்ளார். எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமல்ல, மக்கள் முன்னேற்றத்திற்காக அவை முறையாக செலவிடப்படுகிறதா என்பதே கேள்வி. இந்த முனையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதையே திட்டக்குழுவின் கருத்துரையும் தெளிவாக்குகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications