வீரன் அழகுமுத்துகோன் சிலை பாளையில் வைக்க அரசு அனுமதி
நெல்லை: பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துகோனுக்கு 3,600 கிலோ எடை கொண்ட வெண்கல சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
யாதவர்களை மிகவும் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், யாதவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாநில அளவிலான யாதவர் மகாசபை மாநாடு நெல்லையில் நடந்தது. இதில் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட அழகுமுத்துகோன் சிலையை பாளையில் அமைக்க யாதவ மகா சபை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு அரசின் அனுமதி வழங்கபடாத நிலையில் நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் மாநாட்டு பந்தலில் தற்காலிகமாக சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாளையில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் யாதவ மகா சபை சார்பில் நடந்த மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான யாதவ சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பாளையில் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்காததால் தற்காலிகமாக மாநாட்டு பந்திலேயே சிலை திறக்கப்பட்டது. மொத்தம் 3,600 கிலோ எடையில் வெண்கல சிலை சென்னையில் வடிவமைக்கப்பட்டது.
பாளையில் இந்த சிலையை அமைக்க உடனடியாக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications