தமிழை காப்போம்; பிற மொழிகளுக்கு ஊனம் வராமல் பாதுகாப்போம்- கருணாநிதி
சென்னை: தமிழ் மொழியைக் காப்பதிலும், பிற மொழி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதிலும், தமிழ் மொழியைக் காக்கின்ற அதே நேரத்தில், பிற மொழிகளுக்கு எந்த ஊனமும் வராமல் பாதுகாப்பது என்ற தெளிவான கொள்கை உடையது திமுக என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுவது குறித்தும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
சமச்சீர் கல்வி சம்பந்தமாக கர்நாடகத்தினுடைய முதல்வர் எதியூரப்பா கூறிய கருத்துக்களை பற்றி பல்வேறு கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய கவலையை இங்கே தெரிவித்திருக்கிறார்கள்.
பத்திரிகையாளர்களை சந்திக்கின்றபோது ஆராய்ந்து அல்லது ஏற்கனவே இருப்பதை தெளிவுபடுத்திக் கொண்டு பேசுவது பெரிய கலை. இதிலே எதியூரப்பா எப்படியோ ஏமாந்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.
கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலே உள்ள கலாச்சார உறவு, நட்புறவு இவற்றை ஊனப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அல்லது தெரிந்தோ, தெரியாமலோ சில நிருபர்கள், கர்நாடக முதல்வரிடத்திலே ஒரு தவறான தகவலை சொல்லியிருக்கின்றார்கள்.
அதனால்தான் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும், அதை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்ப்பாய் என்ற பெரியாரின் மொழிகள்தான்- சர்வக்ஞர் என்கின்ற கன்னடத்திலே உள்ள அந்த மகானினுடைய கொள்கையாகவும் போற்றப்படுகிறது.
நிருபர்கள் இந்தக் கேள்வியை கேட்கிறபோது என்ன காரணத்தாலோ, தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளையோ அல்லது அமைச்சர்களையோ அல்லது தொலைபேசி மூலமாக என்னிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு அவர் இந்த கருத்தை தெரிவித்திருப்பாரேயானால், நிச்சயமாக விளக்கம் பெற்றிருப்பார்.
ஆனால், அவசரத்தில் இந்த இரு மாநிலங்களிடையே பிரச்சனை வராதா, வந்தால் அதை வைத்துக் கொண்டு சில காலம் குளிர் காயலாமா என்று கருதுகின்ற சில பத்திரிக்கை நிருபர்களுடைய குறும்புத்தனத்தால், இந்த நிலை ஏற்பட்டதாக நான் கருதுகின்றேன். இதற்கான விளக்கத்தை நம்முடைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இங்கே எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இதற்குப் பிறகும் எதியூரப்பா இதை உணராவிட்டால், நாம் வருத்தம்தான் பட வேண்டும். ஆனால், நம்முடைய நிலை தமிழ் மொழியைக் காப்பதிலும், பிற மொழி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதிலும், தமிழ்மொழியைக் காக்கின்ற அந்த உணர்வில், பிற மொழிகளுக்கு எந்த ஊனமும் வராமல் பாதுகாப்பதும்தான் என்ற தெளிவான கொள்கை உடையது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த விளக்கத்தின் மூலமாக நான் கர்நாடக முதல்வருக்கு, கர்நாடகத்திலே இருக்கின்ற மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications