திருச்சி அருகே சாலை விபத்தில் சிக்கி 6 மனித நேய மக்கள் கட்சி பிரமுகர்கள் பலி
திருச்சி: மனித நேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் ஆறு பேர் திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). இவர் மனித நேய மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த சையது சாதிக் (37), அப்துல் கனி (42), யாசான் (22), மத்தின் (32), சபியுல்லா (32). ஆகியோர் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளாக இருந்தனர்.
ஷேக் அப்துல்லாவின் சொந்தக் காரில் இந்த ஆறு பேரும், திருச்சிக்கு நிலம் வாங்குவது தொடர்பாக வந்தனர். இதுதொடர்பான வேலை முடிந்து, திருச்சியிலிருந்து கிளம்பினர்.
கரூர் மாவட்டம் பாளையம் வழியாக ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். சபியுல்லா காரை ஓட்டினார்.
கார், கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி போலீஸ் சரகம் சரசம்பட்டி அருகே வந்த போது எதிரே பாளையத்தில் இருந்து அரியலூர் செல்வதற்காக ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.
லாரியை திருச்சி மாவட்டம் கள்ளக்குடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (35) ஓட்டி வந்தார். அப்போது திடீர் என்று லாரியின் அச்சு முறிந்து, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் அங்கும், இங்குமாக தறிகெட்டு ஓடியது. இதில் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரை சிறிது தூரம் லாரி இழுத்து சென்றது. பின்னர் ரோட்டின் ஓரம் உள்ள ஒரு கிணற்றின் அருகே கார் மீது லாரி ஒரு பக்கமாக ஏறி நின்றது. கார் கிணற்றின் ஓரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி விட்டது. காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் சிறிது நேர துடிப்புக்குப் பின்னர் காரில் இருந்த ஆறு பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்த உடன் காரில் இருந்த ஒரு செல்போனை எடுத்து தொடர்பு கொண்ட போது தான் பலியானவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மாலையில் அவர் போலீஸில் சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications