தமிழகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பேரவைகள் கலைப்பு
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ராகுல் காந்தி பேரவை, பிரியங்கா காந்தி பேரவைகள் கலைக்கப்படுவதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பெயர்களில் பேரவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பேரவைகளை உடனே கலைத்துவிட வேண்டும் என்று அகில இந்திய செயலாளர் ஜிதேந்திரசிங் பிரசாதா உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு கடிதம் வந்துள்ளது.
குடும்பத்தினர் பெயரில் கட்சி செயல்பாடு இருக்க கூடாது என்று சோனியாவும், இளம் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்புடன் கூறி விட்டனர்.
எனவே அருமை தலைவர்கள் மீது கொண்ட பாசத்தால் காங்கிரசார் தொடங்கிய 4 பேரவைகளையும் உடனடியாக கலைக்க வேண்டும். அதில் பொறுப்பில் இருக்கும் இளைஞர்கள் இளைஞர் காங்கிரசில் சேர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும்.
மேலிட உத்தரவுப்படி உடனடியாக கலைக்காவிட்டால் பேரவை பொறுப்பாளர்கள் மீதும், இந்த பேரவைகளை ஊக்குவிப்பவர்கள் மீதும் கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று யுவராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications