அமிதாப்-ஷாரூக் வருகையை யாராலும் தடுக்க முடியாது!: இலங்கை
கொழும்பு: இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கொழும்பில் வரும் ஜூன் 3 முதல் 5 வரை நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வழங்கும் விழாவில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட குழுவினர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வழங்கும் விழா குறித்து இலங்கை அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இத்தகவலை உறுதியாகத் தெரிவித்தார்.
"அமிதாப், ஷாரூக்கான் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களைப் பங்கேற்க விடாமல் செய்ய சிலர் முயற்சித்தும் வருகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அமிதாப்பும் ஷாரூக்கானும் பங்கேறபார்கள்" என்றார் லக்ஷ்மண் யாப்பா.
இலங்கை இப்போது முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவதாகவும், இந்தத் தருணத்தில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் இலங்கையில் நடப்பது, நாட்டின் முகத்தையே மாற்றி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications