மலேசியாவில் தவிக்கும் ஈழத் தமிழர்கள்-ஸ்டாலினிடம் சிபிஎம் மனு
சென்னை: மலேசிய முகாம்களில் தவிக்கும் 75 ஈழத் தமிழர்களை தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளார்.
மலேசிய முகாம்களில் தவிக்கும் 75 ஈழத் தமிழர்களின் நிலை குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஸ்டாலினிடம் பாலபாரதி இன்று மனு அளித்தார்.
இளந்தமிழர் இயக்கமும் கோரிக்கை:
இந் நிலையில் மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு, மோசமான முறையில் சிறைவைக்கப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என முதல்வர் கருணாநிதிக்கு இளந்தமிழர் இயக்கமும் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த மலேசியாவில் தவிக்கும் மக்களின் ஒலிவடிவ கோரிக்கை ஒன்றினையும் முதல்வருக்கு தனியாக அனுப்பி வைத்துள்ளது இந்த இயக்கம்.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தீவில் வாழ வழியின்றி, அத்தீவை விட்டு வெளியேறி மலேசியாவிற்கு, அகதிகளாகச் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 ஈழத் தமிழர்கள், மலேசிய அரசால் சிறைப் பிடிக்கப்பட்டு கோலாலம்பூர் விமான நிலையத்தின், குடியேற்றத் துறையினருக்குச் சொந்தமான இடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 25.04.2010 அன்று, இளந் தமிழர் இயக்கத்தின் முன்முயற்சியால், சென்னையில் உள்ள மலேசியத் துணைத் தூதருக்கு, பல்வேறு தமிழ் உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கோரிக்கை மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருந்தது.
அம்மனுவில், தஞ்சமடைந்த அகதிகளை மலேசிய நாட்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விதிகளின்படி அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
இதே நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மலேசியத் துணைத் தூதரிடம் மனுக்களை அளித்துள்ளன.
இந்நிலையில், மலேசிய அரசு தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களை அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள மறுத்துள்ளதுடன், அவர்களை கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. தடுப்புக் காவலில் உள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத் தமிழர்கள் சார்பில், அகதிகளாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை மனு ஒன்றை எழுத்து வடிவில் பெறும் நோக்கில் பல்வேறு கட்ட முயற்சிகளை இளந்தமிழர் இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும், அவசரச் சூழலைக் கருதி அம்மக்களின் ஒலி வடிவ கோரிக்கையை இளந்தமிழர் இயக்கம் பெற்றுள்ளது. அதனை இவ்வறிக்கையுடன் நாம் வெளியிடுகின்றோம்.
தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழ் அகதிகள் சார்பில் விடுக்கப்படும், இந்த அவசர ஒலி வடிவக் கோரிக்கையை, உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவில் முயன்று தமிழக அரசிடம் கொண்டு சேர்த்து, ஈழ அகதிகளின் கோரிக்கையை உலகறியச் செய்திட முன்வருமாறும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது..." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இளம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் பலர் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications