நெடுஞ்சாலை கட்டணம்.. பேசமா பிளேன்லயே வந்துறலாம்!

சட்டசபையில் இன்று இது தொடர்பாக பன்னீர்செல்வம் (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), தமிழரசு (பாமக), மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பிரச்சனை கிளப்பி பேசினர்.
பன்னீர் செல்வம் பேசுகையில், தென் மாவட்டங்களில் இருந்து கார்களில் சென்னைக்கு வரும் மக்கள் விமான கட்டணத்தை விட சுங்கச் சாவடிகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், சென்னையில் இருந்து கார் மூலம் திருநெல்வேலி செல்பவர்கள் 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது அரசு நிர்ணயிக்கும் சாலை வரியை விட இரண்டு, மூன்று மடங்கு கூடுதலாக உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு,
விராலிமலைப் பகுதியில் ஒரு தனியார் பஸ் கட்டணத்திற்கு 950 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகளும், தனியார் பஸ் உரிமையாளர்களும் புகார் தெரிவித்தனர். இது குறித்து உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோர் மூலமாக சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடம் பேசுமாறு உத்தரவிட்டோம்.
மேலூரிலும் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டு அங்கு எவ்வளவு கிலோ மீட்டர் தூரத்துக்கு பேருந்து ஓடுகிறதோ அந்த அளவிற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணைப்பிறப்பித்து அதன்படி வசூலிக்கப்படுகிறது.
எனவே இந்தத் தகவலை விராலிமலைப் பகுதி சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேசி முடிவெடுங்கள் என்று தெரிவித்தோம்.
ஆனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை கோட்ட திட்ட அலுவலர், ''புதிய ஒப்பந்தத்தின்படி இந்த கட்டண வசூல் நடைபெறுகிறது. நாங்கள் உடனடியாக முடிவெடுக்க முடியாது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவரிடம் பேசுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தை பொறுத்தவரை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத் தலைவருக்கும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர அகில இந்திய மோட்டார் வாகன உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் பேசியிருக்கிறார்கள்.
ரூ.15,000 கட்டணம் செலுத்தி விட்டால் இந்தியா முழுவதும் எங்கும் போகலாம் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்கள். இது குறித்து மத்திய அமைச்சர் விரைவில் முடிவெடுப்பார்.
இது தொடர்பாக மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை ஆணைய தலைவருக்கு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications