சட்டிஸ்கர் நக்சலைட் தாக்குதலில் தமிழக சிஆர்பிஎப் ஜவான் பலி
சென்னை: சட்டிஸ்கரில் நடந்த நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் அடக்கம் எனத் தெரிய வந்துள்ளது.
சட்டிஸ்கர் மாநிலம், பசகுடா ஆவப்பள்ளி என்ற இடத்தில் இருந்து மத்திய ரிசர்வ் படை போலீசார் குண்டு துளைக்காத கவச வாகனத்தில் பிஜப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
பிஜப்பூரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெடகொடேபால் என்ற கிராமத்தின் அருகே சென்ற போது, நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த கண்ணிவெடி வெடித்ததில் போலீசார் சென்ற வாகனம் நொறுங்கியது. அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியாலும் சுட்டனர்.
இந்த திடீர் தாக்குதலில், 8 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலி ஆனார்கள். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட 8 பேரில் நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.
38 வயதான சுப்பிரமணியத்திற்கு சுப்புலட்சுமி (31) என்ற மனைவியும் கார்த்திகா (3) என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
மத்திய பாதுகாப்பு படையில் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றிய சுப்பிரமணியனுக்கு தற்போதுதான் தலைமைக் காவலராக பணி உயர்வு கிடைத்தது.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது மாவோஸ்டுகள் தாக்குதலில் பலியாகி உள்ளார்.
மறைந்த சுப்பிரமணியன் உடலை பாளையங்கோட்டைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications