கல்கி ஆசிரமம் குறித்து அவதூறு பரப்பும் 5 பேர்-போலீஸ் கமிஷ்னரிடம் பக்தர்கள் மனு

கல்கி ஆசிரம பக்தர்கள் 350 பேர் இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கல்கி ஆசிரமம் பற்றி கடந்த சில தினங்களாக அவதூறு தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஹைதராபாத்தைச் சேர்ந்த தேவி, விஜயவாடாவைச் சேர்ந்த ஹரிபிரசாத், நாராயணன், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த சாந்தி சொரூப், சென்னையைச் சேர்ந்த விசுவநாதசாமி ஆகிய 5 பேர் தான் இதற்கெல்லாம் காரணம்.
இந்த 5 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இவர்கள் வெளியிட்ட தவறான தகவல்களால் கல்கி ஆசிரமம் பற்றி பொதுமக்கள் தவறாக நினைக்கவும், உடமைகளை தாக்கி நாசப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
மேலும் கோடிக்கணக்கான கல்கி பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் உள்ள சுமூகமான சூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கல்கி ஆசிரமம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் நாங்கள் அமைதியை கடைபிடித்து வருகிறோம்.
கல்கி பகவான் எந்த சமயத்திலும் தன்னை கடவுள் என்று கூறியதில்லை. என்னை வணங்குங்கள் என்று அவர் யாரிடமும் சொன்னது இல்லை. அவர் எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வந்த கடவுள் என்று நாங்கள்தான் முழுமையாக நம்புகிறோம். அவர் எங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை.
அவர் எங்களுக்கு அன்பு மார்க்கத்தையே போதிக்கிறார். அனைவரிடமும் அன்பாக இருக்கவும், பெற்றோர்களை மதிக்கவும் அவர் எங்களுக்கு கற்று கொடுத்துள்ளார்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications