தமிழக சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்!
சென்னை: தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பதிலளித்த கீதா ஜீவன்,
பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் பொது வைப்புநிதி தற்போது பிடித்தம் செய்யப்படுகிறது.
இப்போது அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர ஏற்கனவே ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சத்துணவுத் திட்டததுக்குத் தரப்படும் காய்கறி மற்றும் இதர பொருட்களுக்கு கூடுதல் தொகை வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.
அங்கன்வாடி நியமனம்-வி.சி ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 14ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையல்காரர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 29,773 பேரை நியமனம் செய்ய கடந்த 30.6.2008 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தற்போது அதற்கான நேர்முகத் தேர்வும் நடந்து வருகிறது.
ஆனால், இதில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படதில்லை எனத் தெரிய வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வேறு வேலை வாய்ப்பிற்கு வழியில்லாத காரணத்தினால் அங்கன்வாடி பணியில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் முழுமையாக இட ஒதுக்கீட்டை நிரப்பாமல் பணி நியமனம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் முழுமையாக இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 14ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications