செக்கிங் இன்ஸ்பெக்டரை கொலை வெறியுடன் தாக்கிய கும்பல்- தலைமைச் செயலாளர் பிஏ மகன் மீது புகார்
சென்னை : அரசுப் பேருந்தில் பயணித்த ஒரு கும்பல் டிக்கெட் எடுக்காததை தட்டிக்கேட்ட செக்கிங் இன்ஸ்பெக்டரை கோட்டைக்கு வரவழைத்து அங்கு கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய கும்பலுக்கு தலைமைச் செயலாளரின் உதவியாளர் மகன்தான் தலைமை தாங்கியதாக பாதிக்கப்பட்ட செக்கிங் இன்ஸ்பெக்டர் புகார் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜோதி (55). நேற்று 2 சக செக்கிங் இன்ஸ்பெக்டர்களோடு திருவான்மியூர் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் நிறுத்தத்தில் பஸ்களில் சோதனை செய்துகொண்டிருந்தார்.
521ம் எண் பஸ்சில் சோதனை போட்டபோது சில வாலிபர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களை, ஜோதி பிடிக்க முயன்றார்.
டிக்கெட் எடுக்காத வாலிபர்கள் ஜோதியை அடித்து உதைத்தனர். உடனே ஜோதி பஸ் டிரைவரிடம் பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு விடுமாறு கூறினார். ஆனால் பஸ் டிரைவரோ, பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். சம்பந்தப்பட்ட வாலிபர்கள் போகும்போது, நாங்கள் தலைமை செயலாளரின் உதவியாளருக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றும், உன்னை என்ன செய்கிறோம் பார் என்றும் எச்சரித்துவிட்டு சென்றனர்.
இந்த நிலையில், ஜோதி பல்லவன் சாலையில் பஸ்சை விட்டு இறங்கிவிட்டார். அங்குள்ள பல்லவன் இல்லத்தில் இருக்கும் மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜோதியை, போக்குவரத்து துறை செயலாளர் அழைக்கிறார். நீங்கள் உடனே கோட்டைக்கு போகவேண்டும் என்று ஒரு தகவல் வந்தது.
ஜோதி கோட்டைக்கு விரைந்தார். கோட்டையில் போக்குவரத்து செயலாளரின் அலுவலகம் உள்ள பகுதியில் ஒரு கும்பல் ஜோதியை சுற்றி வளைத்து தாக்கியது. அவர் கீழே விழுந்தார். அப்போது அவரை காலால் எட்டி உதைத்தும் அந்த கும்பல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஜோதி மயக்கமடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஜோதி கூறுகையில், செக்கிங் இன்ஸ்பெக்டருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் நாங்கள் எப்படி பணியாற்ற முடியும். என்னை தாக்கியவர்களில் ஒரு வாலிபர் தலைமை செயலாளரின் உதவியாளர் மகன் என்று சொல்லி தான் என்னை அடித்து உதைத்தார் என்றார்.
இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் ஜோதி புகார் கொடுத்துள்ளார். போலீஸார் புகாரைப் பரிசீலித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications