அன்புமணி ராஜ்யசபா எம்பியாக திமுக உதவுமா?

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 11ம் தேதி நடக்கிறது.
தமிழக எம்எல்ஏக்கள் ஓட்டுப் போட்டு 6 எம்.பிக்களை தேர்ந்தெடுப்பர். சட்டசபையில் நியமன உறுப்பினரையும் சேர்த்து 235 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க குறைந்தபட்சம் 34 எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் தேவை.
திமுகவுக்கு சபாநாயகரையும் சேர்த்து 100 உறுப்பினர்கள் உள்ளனர். திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த ஓட்டு பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் கிடைக்கும். இதில் 3 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரசும் வேட்பாளரை நிறுத்தவுள்ளனர்.
அதிமுக கூட்டணி:
அதிமுகவுக்கு 57 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகியோரும், எஸ்.வி.சேகரும் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இன்னொரு அதிமுக பெண் எம்.எல்.ஏவின் வெற்றியை எதிர்த்து வழக்கு நடப்பதால் அவரும் ஓட்டு போட முடியாது. இதனால் அதிமுகவின் உண்மையான பலம் 53 மட்டுமே.
அதன் கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்தக் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதே தெரியாத இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மொத்தமாக 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு சுயேட்சை எம்.எல்ஏவின் ஆதரவும் உள்ளது.
இந் நிலையில் இடதுசாரிகள் ஆதரவு தந்தால் அதிமுகவுக்கு 2 எம்பிக்கள் கிடைப்பர். இல்லாவிட்டால் ஒரு எம்பி மட்டுமே கிடைப்பார்.
இதனால் 6வது எம்பியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்படவுள்ளது.
பாமகவுக்கு திமுக உதவுமா?:
அதே போல பாமகவுக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்தக் கட்சி என்ன செய்யும் என்று தெரியவில்லை. தனித்து நின்றாலும் வெல்ல முடியாது.
பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை திமுக விட்டுத் தரலாம் என்று கருதப்படுகிறது.
இதை பாமகவும் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு திமுக விட்டுத் தந்தால் மீண்டும் பாமவுடன் கூட்டணி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஆனால், அந்தக் கட்சியை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து திமுகவில் மேலிடத் தலைவர்களிடம் மாறுபட்டக் கருத்துகள் உள்ளன.
அதே நேரத்தில் அன்புமணி மீது முதல்வர் கருணாநிதிக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ்-திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டாம் என்று கடைசிவரை போராடிப் பார்த்தவர் அன்புமணி. ஆனால், காடுவெட்டி குரு போன்றவர்களி்ன் நிர்பந்தத்தால் தான் அதிமுக கூட்டணி முடிவை ராமதாஸ் எடுத்தார்.
மேலும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தபோது 7 மக்களவைத் தொகுதிகளோடு ஒரு ராஜ்யசபா இடமும் பாமகவுக்கு என்று பேச்சளவில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தேர்தலில் இந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்ததோடு கூட்டணியும் உடைந்துவிட்டது. இதனால் இம்முறை பாமகவுக்கு அதிமுக உதவ வாய்ப்பில்லை.
விஜய்காந்த் ஓட்டு யாருக்கு?:
அதே போல விஜயகாந்த் யாருக்கு ஓட்டு போடுவார் என்று தெரியவில்லை. பெரும்பாலும் இவரது வாக்கு அதிமுகவுக்கு விழலாம்.
இந் நிலையில் வரும் 30ம் தேதி கூடும் திமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில் பாமக விவகாரம் குறித்தும், திமுக வேட்பாளர்கள் குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications