இந்துவாக இருப்பதே குற்றம் போலிருக்கிறது-தொகாடியா
காந்தி நகர்: குஜராத்தில் நடந்த மதக் கலவரங்கள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜரான விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் பிரவீண் தொகாடியாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது.
குஜராத் மாநிலத்தில் 2002ம் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமான அப்பாவிகள் பலியாயினர்.
இது தொடர்பாக குஜராத் அரசு நடத்திய விசாரணைகளில் உண்மைகள் மறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தியது.
அதே போல பிரவீண் தொகாடியாவுக்கும் எஸ்ஐடி சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந் நிலையில் நேற்று எஸ்ஐடி முன் ஆஜரானார்.
அகமதாபாத்திலுள்ள மகாலட்சுமி கோயிலிலும் காந்திநகர் பஞ்சதேவ கோயிலிலும், தரிசனம் செய்துவிட்டு காந்திநகர் பழைய தலைமைச் செயலக அலுவலக வளாகத்திலுள்ள எஸ்ஐடி அலுவலகத்துக்கு 100 விஎச்பி தொண்டர்கள், சாதுக்களுடன் தொகாடியா வந்தானர்.
அவருடன் வந்தவர்கள் அலுவலகத்துக்கு வெளியே அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை எழுப்பினர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய தொகாடியா, என் மீது என்ன புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. புகார் நகலையும் அதிகாரிகள் என்னிடம் தரவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நான் விசாரணைக் குழு முன்பு ஆஜராக வந்திருக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் உள்ளே சென்றார். இதையடுத்து அவருடன் வந்த ஆதரவாளர்கள் அலுவலகத்துக்கு எதிரே உள்ள புல்வெளியில் அமர்ந்து பஜனைப் பாடல்களை பாட ஆரம்பித்தனர்.
சுமார் 4 மணி நேரம் தொகாடியாவிடம் விசாரணை நடந்தது. சிபிஐ முன்னாள் டிஐஜி ஏ.கே. மல்ஹோத்ரா, அவரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த தொகாடியா நிருபர்களிடம் பேசுகையில், இந்த நாட்டில் இந்துவாக இருப்பதே குற்றம்தான் போலிருக்கிறது. என்னைத் தூக்கில் போடுவதற்காகத்தான் எஸ்ஐடி உருவாக்கப்பட்டது போலும். ஒருவேளை என் பெயர் ஹுசைன் என்று இருந்தால் என்னை அவர்கள் விசாரிக்காமல் விட்டிருப்பார்கள்.
நான் இந்து என்ற காரணத்தால்தான் என்னை எஸ்ஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் எந்த ஒரு இந்துக்கும் பாதுகாப்பில்லை. புனிதப் போர் என்று சொல்லிக் கொண்டு இந்தியா மீது ஜிஹாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்துக்கள், சாதுக்கள், கோயில்கள், கோயில் சார்ந்த அமைப்புகள் மீது அவர்கள் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர்.
கலவரம் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் என்ன பேசினீர்கள் என்று விசாரணையின்போது கேட்டனர். கலவரத்தின்போது நான் ஏன் குஜராத்தில் இருந்தேன்? யார் யாரிடம் பேசினேன் என்றும் விசாரித்தனர்.
நான் ஒரு இந்து. குஜராத்தில் இருப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. எனக்கு நாட்டிலுள்ள 82 கோடி இந்து மக்களைத் தெரியும். யார்? யாரிடம் பேசினேன் என்பதற்கு யார் பெயரைச் சொல்வது என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன் என்றார் தொகாடியா.












Click it and Unblock the Notifications