இந்தியாவின் நிபந்தனையை நிராகரித்தார் பார்வதி அம்மாள்!-யாழ்பாணம் சென்றார்!!
இந்தியாவில் சிகிச்சை பெற பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையான விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல் தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.
இந்த மிருகத்தனமான செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்துதெரிவித்த முதல்வர் கருணாநிதி, அரசுக்குத் தெரிவிக்காமல் வந்து விட்டார் பார்வதி அ ம்மாள். அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றார். அதன்படி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார்.
இதையடுத்து நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை நேற்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் மத்திய அரசின் நிபந்தனையுடன் கூடிய சிகிச்சை வாய்ப்பை பார்வதி அம்மாள் தரப்பு நிராகரித்து விட்டது. நேற்று திடீரென மலேசியாவிலிருந்து பார்வதி அம்மாள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கொழும்பு காட்டுநாயக விமான நிலையத்தில் அவரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், உறவினருமான சிவாஜிலிங்கம் அழைத்து சென்றார். அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பிறகு பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வல்வெட்டித்துறையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தனது எஞ்சிய காலத்தை கழிக்கப் போவதாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.