சென்னை நகை கண்காட்சி கொள்ளை-தென் அமெரிக்க கும்பல் கைது

கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் நடந்த நகைக் கண்காட்சி முடிவுக்கு வந்த நிலையில் 2 சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து கண்காட்சியே நடத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் என்பவர் அளித்த புகாரின் பேரில் தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந் நிலையில் பெங்களூரில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நகைக் கண்காட்சியிலும் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஹோட்டல் பிரைடில் கண்காட்சியை நடத்தியவர் தங்கியிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கண்காட்சி நடந்த இடத்திலும் ஹோட்டல் அறை பகுதியிலும் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
நகைக் கண்காட்சியில் பங்கேற்க அவர்கள் அளித்திருந்த நுழைவு படிவத்தில் இருந்த செல்போன் எண் உதவியோடு இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மூவரையும் பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவர்களிடமிருந்து 5 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டன. அவர்கள் அனைவருமே தென் அமெரிக்காவின் பல நாடுகளில் தயாரான போலி பாஸ்போர்ட்கள் மூலமே உலகம் முழுவதும் பயணம் செய்து வந்துள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியான் ஜோஸ் மாரிசியோ பேரியோஸ் குவாரான் (35) சர்வதேச கொள்ளையனாவான். தென் அமெரிக்காவின் ஈக்வடோர் நாட்டைச் சேர்ந்த இவனுக்கு அண்டை நாடான கொலம்பியாவைச் சேர்ந்த எலெனில்சன் அமில்கார் ரூவானோ (34), மரியா அலெஜாண்ட்ரோ ஜிரால்டோ (22) ஆகிய இருவரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.
பேரியான் இணையத் தளங்கள் மூலம் நகை கண்காட்சி நடைபெறும் நாடுகள் மற்றும் இடங்களை தெரிந்து கொண்டு அங்கு தனது சகாக்களுடன் வந்து இறங்குவது வழக்கம். நகைகளை கொள்ளையடித்தவுடன் அதை பிரித்துக் கொண்டு உடனே இவர்கள் நாடு திரும்பிவிடுவது வழக்கம்.
ஒரே ஆள் அதிகமான நகையை எடுத்துச் சென்றால் விமான நிலையங்களில் சந்தேகம் வரும் என்பதால் இதற்காக சகாக்களுடன் தான் வந்து போயுள்ளான்.
இந்தியாவில் மட்டும் 6 நகைக் காட்சிகளில் இவன் கைவரிசையை காட்டியுள்ளான்.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த நகை கண்காட்சியில் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததும் இவன் தான் என்பது பெங்களூர் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் பெங்களூர் சென்று மூவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன் நான்கவதாக ஒரு பெண்ணும் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு சென்னை கொள்ளையில் தொடர்பில்லை என்பதால் தமிழக போலீசார் கைது செய்யவில்லை.
இந்தக் கும்பலுக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒரு கடத்தல் கும்பலும் உதவி வந்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications