சொத்துகள் வாங்கும் ஏழைகளுக்கு பதிவு கட்டணம் ரத்து!
சென்னை: வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் ரூ.5,000 வரையிலான சொத்துகளை வாங்கினால் அதற்கு பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பத்திரப் பதிவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்த அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்:
ஏழை மக்களும் சொந்தமாக சொத்துகள் வாங்குவதை ஊக்குவிக்க ரூ. 3,000 வரை மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இனி, சொத்துகளின் மதிப்பானது ரூ.5,000 ஆக உயர்த்தப்படுகிறது.
இந்தத் தொகை வரையிலான மதிப்புள்ள சொத்துகளுக்கு பதிவு மற்றும் முத்திரைத் தீர்வையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
சார்பதிவாளர் அலுவலகங்களின் மதிப்பை பொது மக்கள் மத்தியில் உயர்த்திடும் வகையில் 10 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச் சான்று பெறப்படும்
கணினி மையம் மூலம் திருமணச் சான்றுகள்:
இனி மக்கள் கணினி மையங்கள் மூலமே வில்லங்கச் சான்றுகள், திருமணச் சான்றுகள் ஆகியன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் நடைபெறும் கிறிஸ்தவர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு சென்னையில் உள்ள பதிவுத் துறைத் தலைவர் அலுவலகத்தில் மட்டுமே சான்று வழங்கப்படுகிறது. இது, அந்த சமூக மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, 1872ம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படும். கிறிஸ்தவர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கான பதிவுகள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். அந்த அலுவலகத்திலேயே சான்றுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் சுரேஷ் ராஜன்.












Click it and Unblock the Notifications