காதல கல்யாணம் செய்த தம்பதிகள் ரேஷன் கார்டு பெற சலுகை-அமைச்சர் வேலு
சென்னை: காதல் கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு, ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருந்தால் அவர்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ரேஷன் கார்டு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு உணவுத்துறை அமைச்சர் வேலு பதில் அளித்து பேசினார்.
அவர் கூறுகையில், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், விவாகரத்து பெற்ற பெண்களுக்கும் ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்று மகளிர் ஆணைய தலைவி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
எனவே கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கள் கணவர் எந்த முகவரியில் இருக்கிறார் என்று தெரிவித்தால் அந்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று விசாரித்து அந்த ரேசன் கார்டில் இருந்து சம்பந்தப்பட்ட பெண்களின் பெயர்களை நீக்கி அவர்களுக்கு ரேசன் கார்டு வழங்கலாம்.
அதேபோல விவாகரத்து பெற்ற பெண்கள், தாங்கள் விவாகரத்து பெற்ற கோர்ட் உத்தரவை காட்டினால் அந்த கோர்ட்டு உத்தரவையே நீக்கல் சான்றிதழாக கருதி ரேசன் கார்டு வழங்கப்படும்.
காதல் மற்றும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தங்கள் பெற்றோர்களிடம் இருந்து பெயர் நீக்கல் சான்றிதழ் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.
எனவே, ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருந்தால் அவர்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பெற்றோர் ரேசன் கார்டு நகல் அல்லது பெற்றோர் முகவரி கொடுத்தால் அந்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று விசாரணை செய்து அந்த கார்டுகளில் இருந்து பெயர்களை நீக்கிவிட்டு 60 நாளில் ரேசன் கார்டு வழங்கப்படும் என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications