மகாபலிபுரம் சாலையில் எம்எல்ஏக்களுக்கு வீட்டு மனைகள்
சென்னை: பழைய மகாபலிபுரம் சாலையில் எம்எல்ஏக்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபையில் அவர் கூறுகையில், இதற்காக சென்னை பழைய மகாபலிபுரம் சாலையல் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். இங்கு வீடுகள் கட்ட வீட்டு மனைகள் சந்தை விலையில் எம்எல்ஏக்களுக்குத் தரப்படும்.
இந்த வீட்டு மனைகளுக்கான விலை குறித்து அமைச்சரவையில் விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
ஆனால், எம்எல்ஏக்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அதன் விவரம்:
ஜி.கே. மணி (பாமக): ராமநாதபுரம், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் வறட்சி நீடிக்கிறது. இங்கு குடிநீர் வழங்க ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது என்கிறார்கள். அந்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஸ்டாலின்: நிதி போதாது. மேலும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் கண்காணித்து அறிக்கை பெற்று கூடுதல் நிதி ஒதுக்கி குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்.
ஜெயக்குமார் (அதிமுக): திருவான்மியூர் மீனவர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 350 குடிசைகள் எரிந்துவிட்டன. கிராமப் பகுதிகளில் புதிய வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுப்பதுபோல் சென்னை போன்ற நகரங்களிலும் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படுமா?
ஸ்டாலின்: உறுப்பினர் சொல்லும் அந்தத் திட்டத்தின் பெயர் கலைஞர் வீட்டு வசதி திட்டம். ஆனால் அவர் கலைஞர் என்ற பெயரை சொல்லாமல் விட்டுவிட்டு வீட்டு வசதி திட்டம் என்கிறார். பெயரை சொன்னால் பிரச்சனை வந்துவிடும் என பெயரை விட்டிருப்பார். ஊரக பகுதிகளுக்குதான் இந்த திட்டம். மாநகர பகுதிகளில் குடிசையில் வாழ்பவர்களுக்கு மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
திருவான்மியூரில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் யார், யாருக்கு வீடு வழங்கலாம் என்ற கணக்கெடுப்பு முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கிராமப் புறங்களில் கட்ட முடியாத மீதம் உள்ள வீடுகளை பேரூராட்சி பகுதியில் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா? கான்கிரீட் வீடு பெற தகுதி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுமா?
ஸ்டாலின்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்துக்கு 90 சதவீத கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. இதில் கிராம பகுதியில் கட்ட முடியாமல் விடுபட்டு போன வீடுகளை பேரூராட்சி பகுதிகளில் கட்டும் வாய்ப்பு பற்றி பரிசீலிக்கப்படும். கான்கிரீட் வீடு பெறும் தகுதி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை காத்திருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications