சட்டசபையின் பண்பாடு சூறையாடப்படுவது கவலை தருகிறது – கருணாநிதி

சட்டசபையில் நேற்று சிறுதாவூர் விவகாரம் சூடான விவாதத்தையும், அமளியையும் ஏற்படுத்தியது.
விவாதம் முடிவடைந்ததும் முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசுகையில்,
2003-ம் ஆண்டு இந்த பேரவையிலே தலைவராக இருந்த தமிழறிஞரும், என் அருமைத்தம்பிகளில் ஒருவருமான மறைந்த காளிமுத்து இங்கே ஒரு ஆணையை வெளியிட்டார். அவர் அப்போது இங்கே என்ன சொன்னார் என்றால்- அவையிலே குழப்பம் ஏற்பட்டபோது வெளியேற்றப்பட்டவர்கள்- வெளியே சென்று பேட்டி கொடுப்பது- அமைச்சர்களை அவதூறாகப் பேசுவது- இவைகளைப் பற்றியெல்லாம் சொன்னார். அவர் சொன்ன வாசகத்தை அப்படியே சொல்கிறேன்.
"இங்கேயிருந்து புறப்பட்டுப் போனவர்கள் லாபியிலே நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு அங்கேயே "பிரஸ் கான்பரன்ஸ்'' நடத்திக்கொண்டிருப்பதைப் போல தகவல் வருகின்றது. அது உண்மையாக இருக்குமேயானால், அதைத் தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி நடைபெறுமேயானால், அவைக் காவலர்கள் உடனடியாக அந்த தலைவர்களை- கட்சியினரை அங்கேயிருந்து வெளியேற்ற வேண்டுமென்று நான் ஆணையிடுகிறேன். அதே போல, பத்திரிகையாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவையிலிருந்து வெளியேறிய - வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் ஏதாவது பேட்டி அளித்தால், சட்டமன்ற வளாகத்திற்குள்ளே அவர்களின் பேட்டிகள் எதையும் பதிவு செய்யக்கூடாது. அப்படி பதிவு செய்யக் கூடிய பத்திரிகை நிருபர்கள் பிறகு இங்கே உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த அளவிற்கு நிலைமை வரும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அன்றைய பேரவைத் தலைவர் காளிமுத்து ஒரு அச்சுறுத்தலை கடந்த அவையில் வெளியிட்டார்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் - வெளியே செல்பவர்கள் இப்போது கூட - கொஞ்ச நேரத்திற்கு முன்பு வெளியே சென்றவர்கள்- நேற்று சென்றவர்கள் எல்லாம் என்னைப் பற்றியும், தங்களைப் பற்றியும், "ஒழிக'' கோஷம் போட்டது மாத்திரமல்லாமல் மிகுந்த கேவலமான வார்த்தைகளையெல்லாம் சொல்லி - ஒரு முதல்-அமைச்சரை பற்றி எந்த அளவிற்கு தங்கள் ஆத்திரத்தைக் காட்டவேண்டுமோ அந்த அளவிற்கு ஆத்திரத்தைக் காட்டி கோஷம் போட்டிருக்கிறார்கள்.
நான் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. நான் கவலைப்படுவது "டெகோரம்' - அவையினுடைய மொத்த பண்பாடு- இதற்கென்று இருக்கின்ற ஒரு அமைப்பு ரீதியான அங்கீகாரம் சூறையாடப்படுகிறதே என்பது தான். அதனால் தான் அந்த காலத்திலே காளிமுத்து, அ.தி.மு.க. சார்பில் இங்கே அவைத் தலைவராக இருந்தபோது எடுத்துச் சொன்ன அந்த அச்சுறுத்தலை நான் இங்கே வெளியிட விரும்பினேன். தயவு செய்து அதைப் பின்பற்றி தாங்களும் நடந்து கொள்ள வேண்டுமென்று அவைத் தலைவராகிய தங்களையும், இந்த அவையிலே உள்ள கட்சி தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications