பாவூர்சத்திரம் பகுதியில் கொத்தமல்லி விலை கிடுகிடு உயர்வு
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு பின் மல்லி இலை பயிரிடுவது வழக்கம். விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகளுக்கும் கணிசமான லாபம் கிடைக்கும்.
இந்த ஆண்டு கோடை வெயில் ஆரம்பத்தில் வறுத்தெடுத்ததால் மல்லி இலைகள் சரியாக முளைவிக்கவில்லை. அதோடு மழையும் சேர்ந்து கொண்டதால் முளையிட்ட பயிர்களும் அழுகி விட்டன. இதன் காரணமாக மல்லி இலை மகசூல் குறைந்துவிட்டது.
2 மாதத்துக்கு முன் கிலோ ரூ.15க்கு விற்ற மல்லி இலை படிப்படியாக உயர்ந்து மூன்று நாட்களுக்கு முன் ரூ.30 ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை போன்று நேற்று கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120 ஆனது. பாவூர்சத்திரம் மார்கெட்டுக்கு தினமும் 10 மூடை மல்லி இலைகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள். இப்போது வெறும் 10 கிலோ மட்டும் வருகிறது. மகசூல் இல்லாததால் மதுரையில் இருந்து மல்லி இலை வரவழைக்கப்படுகிறது.
விலையேற்றம் காரணமாக வியாபாரிகளும் அதிக அளவு கொள்முதல் செய்ய விரும்பவில்லை. பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மூடை மூடையாக இறங்கிய மல்லி இலை இன்று காட்சி பொருளாகிவிட்டது.