பிளஸ் டூவில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்
நெல்லை: பிளஸ்டூவில் குறைந்த தேர்ச்சி விகிதத்தை சந்தித்துள்ள பள்ளிகளுக்கு மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் பெரும்பாலான அரசு மற்றும் அரசு நி்தியுதவி பெரும் பள்ளிகள் குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றன. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் பாதிக்க வாய்ப்புள்ளதாக கருதி தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்விதுறை எச்சரித்தது.
இதன் தொடர்ச்சியாக தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அனைத்து பள்ளிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக கடந்த ஆண்டில் பெரும்பாலான பள்ளிகள் 60 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை எட்டின. இந்நிலையில் இந்த வருடம் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
இந்தாண்டு 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகள் பட்டியலை தயாரித்து அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்ச்சி விகித குறைவுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்குள் இதற்கு பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 2 பள்ளிகள் மட்டும் 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப்பட்டுள்ளதாம்.