காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய ஜெ.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து காளஹஸ்தி வந்து சேர்ந்தார் ஜெயலலிதா.
அவரது ஹெலிகாப்டர் அங்குள்ள பொறியியல் கல்லூரி மைதானத்தில் இறங்கியது. பின்னர் அந்த இடத்திலிருந்து கார் மூலம் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா.
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு கால நேரத்தில் ராகு-கேது பூஜையில் கலந்து கொண்டு சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்தார். பின், மூலவரான வாயுலிங்கேஸ்வர சுவாமி, ஞானபிரசூணாம்பிகை தாயார் சன்னிதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக தமிழகத்திலிருந்து போலீஸார் வந்திருந்தனர். மேலும், ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக அவரது தனிச்செயலாளர் சீனிவாசன் மேற்பார்வையில், தமிழக, ஆந்திர போலீஸார் மற்றும் கோவில் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்தினர்.
27ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம்:
இந் நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் ஜெயலலிதா. வரும் 27ம் தேதி இக் கூட்டம் நடக்கிறது.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்திலேயே இந்தக் கூட்டம் நடக்கும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இக் கூட்டம் நடக்கிறது.
இதில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்தும், அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
30ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் 27ம் தேதி தனது கட்சியின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் ஜெயலலிதா.
ஜுன் முதல் வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தையும் ஜெயலலிதா கூட்டுவார் என்று தெரிகிறது.
மணல் எடுப்பதை எதிர்த்து கரூரில் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் கரூர் மாவட்ட காவிரிப் படுகையில் சட்ட விரோதமாக மணல் எடுப்பதாகக் கூறி நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள இடங்களான நன்னியூர், நெரூர், லாலாப்பேட்டை, கட்டளை, கருப்பத்தூர், திம்மாச்சிபுரம் போன்ற பகுதிகளிலிருந்து தினமும் 5,000 லாரிகள் வரை மணல் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் 1,500 லாரிகளில் எடுக்கப்படும் மணல் வருவாய் அரசாங்க கருவூலத்திற்குச் செல்கிறது. மீதமுள்ள 3,500 லாரிகளில் எடுக்கப்படும் மணலுக்கு சட்டத்திற்குப் புறம்பாக மணல் எடுப்பதை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் 18ம் தேதி கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமையிலும், கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார்.