கடைசி நேரத்தில் பிளாட்பாரம் மாற்றம்-டெல்லி ரயில் நிலைய நெரிசலில் 2 பேர் பலி
டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் கடைசி நேரத்தில் ரயில்கள் புறப்படும் பிளாட்பாரத்தை மாற்றியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பலியாயினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பிகார் தலைநகர் பாட்னா செல்லும் சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ், வழக்கமாக 13வது பிளாட்பாரத்தில் இருந்து பிற்பகலில் புறப்பட்டு செல்லும். நேற்று பிற்பகல் 2.50 மணி அளவில் கடைசி நேரத்தில், அந்த ரயில் 12வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் வழக்கமாக 12வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் விக்ரம்சிலா எக்ஸ்பிரஸ் 13வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் 13வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் 12வது பிளாட்பாரத்துக்கும், 12வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் 13வது பிளாட்பாரத்துக்கும் அவசர அவசரமாக பெட்டி, பைகளுடன் ஓடினர்.
இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சோனி (35) என்ற பெண்ணும், 10 வயது சிறுவனும் பலியாயினர். மேலும் 3 பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். தவறு செய்த ரயில்வே அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000மும் நிதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.