For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 மாநிலங்களில் 48 மணி நேர நக்சல் பந்த்: பேச்சுவார்த்தைக்கு ப.சி. அழைப்பு

Google Oneindia Tamil News

P Chidambaram
டெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் தான்டேவாடா மாவட்டத்தில் அப்பாவி மக்கள் பயணம் செய்த பேருந்தை கண்ணிவெடி வைத்து நக்சலைட்டுகள் தகர்த்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நக்சலைட்களை ஒழிக்க விமானப்படை தாக்குதலை நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் நக்சலைட்டுகள் வன்முறையைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று தான்டேவாடா மாவட்ட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செயலுக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியின் சாராம்சம்...

நான் தான்டேவாடா தாக்குதல் குறித்து சட்டீஸ்கர் முதல்வருடன் பேசினேன். அப்போது வழக்கமாக செல்லும் பயணிகள் பஸ்தான் தாக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.அதில் 15 முதல் 20 பொதுமக்கள் பயணித்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் தவிர சில சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இருந்துள்ளனர். கண்ணிவெடியில் சிக்கி பஸ் தூக்கி வீசப்பட்டுள்ளது.

மத்திய போலீஸார், மாநில போலீஸார், அப்பாவிப் பொதுமக்கள் என நக்சலைட்டுகள் பாரபட்சம் பார்ப்பதில்லை என்றே கருதுகிறேன். கொலை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஒரே இலக்காக உள்ளது. கொன்ற பிறகுதான் அதற்கான காரணத்தை தேடுகிறார்கள்.

கடந்த சில நாட்களில் மட்டும் 12 அப்பாவி மக்களை நக்சலைட்டுகள் கொன்றுள்ளனர்.

நக்சலைட்டுகளை ஒழிப்பது தொடர்பான கொள்கையை மத்திய அரசும், நானும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். பிரதமரும் இதுகுறித்து தெளிவாக உள்ளார். சோனியா காந்தியும் கூட இதில் தெளிவாக உள்ளார்.

தற்போது இந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாகவே கருதுகிறேன். ஜனநாயகத்தில் இது தவிர்க்க முடியாதது.

உயிர்கள் பறிபோவது என்பதை ஏற்க முடியாது. அது எந்த உயிராக இருந்தாலும் சரி, அது கொடூரமாக பறிக்கப்படும்போது அது எனக்கு வலியைத் தருகிறது.

தற்போது விமானப் படைத் தாக்குதல் குறித்து அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை.

பாதுகாப்புப் படையினர், முதல்வர்கள் இதை கோருகிறார்கள். மேற்கு வங்கம், ஆந்திரா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா மாநில முதல்வர்கள் இதைக் கோருகிறார்கள். அவர்கள்தான் நக்சலைட்டுகளுடன் நேரில் போராடி வருபவர்கள்.

அவர்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துக் கூற முற்சிப்பேன்.

இது போர் அல்ல, போர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். ஒருபோதும் அதை நான் சொல்ல மாட்டேன். எதிரி என்ற வார்த்தையைக் கூட நான் பயன்படுத்த மாட்டேன். ஆனால் ஒட்டுமொத்த மாவோயிஸ்ட் இலக்கியத்தில், போர், எதிரி என்ற வார்த்தை மட்டுமே அதிகம் காணப்படுகிறது.

நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

முன்னதாக உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், நக்சல்கள் பாரபட்சம் பார்க்காமல், கொலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறவர்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அப்பாவி மக்களை இலக்கு வைத்துத்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

நக்சலைட்களுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததி ராய் போன்றோர் இந்த சம்பவத்தை வரவேற்கிறார்களா என்பதை விளக்க வேண்டும் என்றார்.

மாவோயிஸ்டுகள் பந்த்:

இதற்கிடையே மத்தியப் படைகளி்ன் தேடுதல் வேட்டையைக் கண்டித்து மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பிகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நேற்று நள்ளிரவு 12 முதல் 48 மணி நேர பந்துக்கு நக்ஸலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த மாநிலங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய படைகள் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும், லாபம் தரும் பொது நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பதை வற்புறுத்தி இந்த முழு அடைப்பை நக்ஸல்கள் நடத்துகின்றனர்.

பிரதமர் தலைமையில் உயர் மட்டக் கூட்டம்:

இதற்கிடையே மாவோயிஸ்டுகள் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சி்ங் இன்று மாலை உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X