தமிழினம் கண் கலங்கி நிற்கிறது-டாக்டர் ராமதாஸ்
சென்னை: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு பகுதியில் மாநில சுயாட்சி முறையைக் கொண்டு வர உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கடந்த ஆண்டு மே 17ம் தேதி இலங்கையில் நடந்த உச்சகட்ட போரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாமக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்க ராமதாஸ் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஒரு இனம் திட்டமிட்டு, அழிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சொந்தங்கள் நம் கண் முன்னே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நம்மால் எதையும் செய்ய முடியவில்லை.
இன்றைய தினம் தமிழினம் கண் கலங்கி நிற்கிறது. அவர்களுக்கு விடிவு காலம் எப்போது, அவர்கள் எழுந்து வாழும் எப்போது வரும் என்ற ஏக்கம் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கு விடை காணும் காலம் விரைவில் வரும். அந்த வகையில் பாமக தன்னுடைய பணியை தொடர்ந்து செய்யும்.
1989ம் ஆண்டில் பாமக ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் போட்ட ஒரே தீர்மானம் இலங்கையில் தமிழீழம் அமைவது என்பது தான். அதன்பிறகு ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தி, அதில் பேசியதற்காக அப்போது நானும், தீரன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.
அப்போது நான் சொன்னேன். இலங்கை தமிழர்களுக்காக பேசுவேன். பேசிக்கொண்டே இருப்பேன் என்று. இப்போதும் அதைத்தான் செய்துகொண்டே இருக்கிறேன்.
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் மீண்டும் புலம் பெயர்ந்த தமிழர்களை குடி அமர்த்த வேண்டும். அவர்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். வடக்கு-கிழக்கு பகுதிகளை இணைத்து அங்கே தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தர உலக நாடுகள் முன் வர வேண்டும்.
இந்தியாவில் காஷ்மீரில் மாநில சுயாட்சி முறை இருந்து வருகிறது. அதைப் போல் ஈழத்தில் வடக்கு-கிழக்கு பகுதியில் மாநில சுயாட்சியை ஏற்படுத்தித் தர உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உதவ வேண்டும் என்றார்.