ஸ்டாலின் முயற்சியால் ரூ.1,000 கோடி மதிப்பு 21 ஏக்கர் நிலம் மீட்பு
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியினால் சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான 21 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேயர் சுப்பிரமணியன் இன்று திருவல்லிக்கேணி, வல்லப அக்ரஹாரம் தெருவில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் 2,800 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் உள்ளன. 1995ம் ஆண்டு 613 கி.மீ. நீளத்திற்கு மட்டுமே மழைநீர் வடிகால்வாய் இருந்தது. 1996ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றவுடன் நாலரை ஆண்டுகளில் 135 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்வாய்களை கட்டினார்.
மேலும் 84 கி.மீ. நீளத்திற்கு பழைய மழைநீர் வடிகால்வாய்கள் மேம்படுத்தப்பட்டன. இதற்காக ரூ.68 கோடி செலவு செய்யப்பட்டு சென்னை மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட.
இப்போது சென்னை மாநகருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டமிட்டு, பல்வேறு நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். கீழ்ப்பாக்கம் நீர்நிலையத்தில் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்க ரூ. 51 கோடி மதிப்பிலான மேல்நிலைத் தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
அவரது அறிவுரைப்படி, இந்த நிலையத்திலிருந்து குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் மீது 21 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு குடிநீர் வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது என்றார்.