ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு
குஷ்பு சமீபத்தில் திமுகவில் இணைந்ததையடுத்து ஜெயா டி.வி.யில் அவர் நடத்திவந்த 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் குஷ்பு அளித்துள்ள பேட்டியில்,
ஜெயலலிதா எப்போதுமே என்னுடன் நட்பாக இருந்தது இல்லை. அவரை நான் நேரில் சந்தித்தபோதுகூட அதிகம் பேசிக்கொள்ளவில்லை. நான் அதிமுக அனுதாபி என்று தவறாக செய்திகள் பரப்பப்பட்டன.
ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தினேன். அதை நிறையபேர் பாராட்டினார்கள். ஆனால் ஜெயலலிதா அதுபற்றி என்னிடம் பேசியதே இல்லை. திமுகவில் சேர்ந்ததும் ஜாக்பாட் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர்.
திமுகவில் சேர்ந்தது சுயமாக எடுத்த முடிவு. யாரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை. சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எனக்கு சீட் கிடைத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தைரியம் பக்குவம் இருந்தால் தாராளமாக அரசியலில் ஈடுபடலாம்.
நான் அரசியலில் ஈடுபட்டதை பலர் விமர்சிக்கின்றனர். நடிகையாக இருப்பவர்களுக்கும் நாட்டு நடப்புகள் நன்றாக தெரியும். திமுகவில் தனி மனித சுதந்திரம் இருப்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன். இங்கு கருத்து சொல்லும் சுதந்திரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.













Click it and Unblock the Notifications