Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடர் கன மழையால் மின்சாரம் துண்டிப்பு - இருளில் மூழ்கி சென்னை மக்கள் பெரும் அவதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லைலா புயல் எதிரொலியாக சென்னையில் நேற்று முழுவதும் பெய்து வந்த கன மழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

லைலா புயல் காரணம்க சென்னையில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரில் மிதந்தன. அதைத்தொடர்ந்து ஏராளமான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சென்னை நகரமே இருளில் மூழ்கியதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

சென்னை நகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் நேற்றிரவு 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. அதுபோல திருவல்லிக்கேணி, பெல்ஸ் ரோடு, சிந்தாதிரிப்பேட்டை, கடற்கரை சாலை, புரசைவாக்கம், பெரம்பூர், செம்பியம், திரு.வி.க.நகர், சேத்துப்பட்டு, எழும்பூர், வேப்பேரி உள்பட பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

கடற்கரை சாலையில் நேற்றிரவு திடீரென மின்தடை ஏற்பட்டதால் மெரீனா கடற்கரையில் இருந்த மக்கள் பதறினர். அவசரம் அவசரமாக அங்கிருந்து ஓடினர்.

மின்தடை பற்றி புகார் கொடுக்க வேண்டிய மின்வாரிய அலுவலக தொலைபேசி எண்கள் எப்போதும் பிஸி'யாகவே இருந்தன. அதுபற்றி விசாரித்த போது மின்தடை பற்றி ஏராளமான புகார்கள் வந்ததால் டெலிபோனை எடுத்து கீழே வைத்து விட்டார்களாம் ஊழியர்கள்.

இதனால் பொதுமக்களால் மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் மின்சப்ளை நிறுத்தப்பட்டிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பெரும்பாலான இடங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தன.

அடையாறு சாஸ்திரி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. ராதாகிருஷ்ணன் நகரில் குடிசைப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். கிண்டி தொழிற்பேட்டையில் 2 மரங்கள் விழுந்ததால் 2 லாரிகள் சேதமடைந்தன.

சென்னையில் 8 செ.மீ் மழை

சென்னையில் நேற்றும் காற்றுடன் மழை தொடர்ந்து நீடித்தது. விட்டு, விட்டு பலத்த மழை கொட்டியதால், ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் நேற்று காலை வரை பதிவான மழையின் அளவு 8 செ.மீ. ஆகும்.

வேப்பேரி, வியாசர்பாடி, புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், கீழ்ப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. உடனடியாக அவைகள் அகற்றப்பட்டன.

பல இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின்சாரம் தடைபட்டது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் நேற்று மரம் முறிந்து விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். சென்னையில் பல இடங்களில் நேற்று டிரான்ஸ்பார்மர்கள் வெடித்தன. இதனால், அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

தொடர் மழையால் நகரின் தாழ்வான பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பட்டினப்பாக்கம், பேசின்பிரிட்ஜ், கணேசபுரம், டவுட்டன், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் நீர் வெள்ளம்போல் ஓடியது.

குளம் போல் தண்ணீர்

பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே உள்ளே தரைப்பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் சென்றன.

நள்ளிரவு முதலே விடாமல் மழை பெய்து கொண்டிருந்ததால், காலையில் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ரெயின் கோட் அணிந்து சென்றாலும், சிலரது வாகனங்கள் திடீரென மக்கர்' செய்தது. இதனால், சாலையோரம் வாகனங்களை தள்ளியபடி சிலர் சென்றதை காண முடிந்தது.

தள்ளுவண்டிகளாக மாறிய பைக்குகள்

சென்னையில் நேற்று முழுவதும் மழை தொடர்ந்து பெய்ததால், சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. முன் விளக்குகளை எரியவிட்டப்படி பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.

தண்டவாளங்களில் ஆங்காங்கே சிறிது தண்ணீர் தேங்கியிருந்தாலும் ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. எல்லா ரயில்களும் வழக்கம் போல் இயங்கின. ரயில்களில் கூட்டமும் அதிகமாக இருந்தது.

அடைமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்தது. புளியந்தோப்பு, பாரிமுனை பகுதி, ஓட்டேரி, வியாசர்பாடி, கொடுங்கையூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலும், மத்திய சென்னையில் கோயம்பேடு, புரசைவாக்கம், திருமங்கலம், எழும்பூர் ஆகிய பகுதிகளிலும், தென்சென்னையில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, அசோக்நகர் ஆகிய பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

சென்னை நகரில் உள்ள அனைத்து ரோடுகளிலும் மழைநீர் வெள்ளம் போல ஓடியது. இதனால் அனைத்து முக்கியமான ரோடுகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்திற்குள்ளும் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. கேண்டீனுக்குள்ளும், அதையொட்டியுள்ள சைபர் கிரைம் போலீஸ் பிரிவுக்குள்ளும் மழை நீர் புகுந்துவிட்டது.

இதனால் சைபர் கிரைம் போலீஸ் பிரிவையும், போலீஸ் கேண்டீனையும் நேற்று மூடிவிட்டார்கள்.

சென்னை நகரில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை உள்பட அனைத்து சுரங்கப்பாதைகளும் மழை நீரில் மூழ்கின.

விமான போக்குவரத்தும் பாதிப்பு:

லைலா புயல் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

46 பயணிகளுடன், சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல இருந்த கிங்பிஷர் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல திருச்சி, கோவை, பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகர்களுக்குச் செல்லும் சுமார் 20 விமானங்கள், 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம்வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

மதுரைக்கு நேற்றிரவு 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயணம் செய்தார் என்பது குறிபபிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+