16.5 டன் அமோனியம் நைட்ரேட் அடங்கிய லாரியை கடத்திய மாவோயிஸ்ட் நக்சலைட்கள்
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 16.5 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டுடன் வந்த லாரியை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லாரியில் இருந்தது உயர் ரக அமோனியம் நைட்ரேட் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பரபப்பு கூடியுள்ளது. விசாகப்பட்டனத்திலிருந்து இந்த லாரி வந்து கொண்டிருந்தது.
இந்த அமோனியம் நைட்ரேட், நைட்ரஜன் உரமாக பயன்படுத்தப்படும். அதேசமயம், வெடிகுண்டுகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படும் என்பதால், அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பஸ்தார் பகுதியில் வைத்து இந்த லாரியை நக்சலைட்கள் கடத்தியுள்ளனர்.
தலைநகர் ராய்ப்பூருக்கு இந்த லாரி போய்க் கொண்டிருந்தது. விசாகப்பட்டனத்திலிருந்து பஸ்தார் வழியாக ராய்ப்பூர் போவது ஷார்ட் கட் என்பதால் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த இந்தப் பகுதி வழியாக அந்த லாரி போனதாகும்.
நக்சலைட்களின் கோட்டை வழியாக சென்ற இந்த லாரிக்குப் பாதுகாப்பாக எந்த வீரரும் உடன் செல்லவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
லாரியைக் கடத்திய நக்சலைட்கள் டிரைவரை மட்டும் விடுவித்தனர். அவர் தப்பி வந்த பஸ்தார் மாவட்ட எஸ்.பி. சுந்தரராஜிடம் விஷயத்தைக் கூறிய பிறகே இந்த விவரம் தெரிய வந்தது.
தற்போது லாரியைத் தேடி தீவிர வேட்டை தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ஐஇடி ரக வெடிகுண்டுகளை நக்சலைட்கள் இந்த அமோனியம் நைட்ரேட்டை வைத்துதான் தயாரித்து வருகின்றனர் என்று பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே கூறியுள்ளனர். இந்த நிலையில் பெருமளவிலான அமோனியம் நைட்ரேட்டை அவர்கள் கடத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் வைத்து டெட்டனேட்டர்களுடன் சென்ற ஒரு லாரியை நக்சலைட்கள் கடத்தியது நினைவிருக்கலாம். இதுவரை அந்த டெட்டனேட்டர்கள் கிடைக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications