For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லைலா போயும் சென்னையில் தொடர்ந்து கடல் சீற்றம்

Google Oneindia Tamil News

சென்னை : லைலா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்து வலுவிழந்திருந்தாலும், சென்னையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து பலத்த காற்றும் வீசி வருகிறது.

இந்த கடல் சீற்றத்தில் மீன் பிடிக்கப் போன ஐந்து மீன் பிடி படகுகள் கடலில் கவிழ்ந்தன.

வங்கக் கடலில் உருவாகி தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா மாநிலங்களைப் பயமுறுத்தி விட்ட லைலா புயலால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் குறிப்பாக சென்னையில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை நாட்களாக பெய்த கன மழையால் சென்னை நகரம் தட்டுத் தடுமாறிப் போய் விட்டது.

பலத்த மழையும், கடுமையான காற்றுமாக சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது. அக்னி நட்சத்திர வெயிலின் அகோரத்தை அடியோடு குறைத்து விட்டது இந்த லைலா புயல்.

லைலா புயல் ஆந்திராவில் நேற்று கரையைக் கடந்து விட்டது. இருப்பினும் அது முற்றிலும் கலையாமல் மீண்டும் வங்கக் கடலில் புகுந்து மேலும் வலுவான புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் மேற்கு வங்கம், ஒரிசா, வங்கேதசம் ஆகியவற்றில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புயலின் போக்கை வானிலை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

லைலா புயலால், கடல் அலையின் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நேற்று முன்தினம் இரவு முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரளவு மழை குறைந்தது. நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், கடல் பகுதி தொடர்ந்து சீற்றமாகவே காணப்பட்டது. அலைகள் பெரிதாக எழுந்து சுழன்று கரையில் வேகமாக மோதின.

இதனால், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே, மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் ஓய்வு எடுத்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால், பெரும்பாலான பைபர் படகு மற்றும் கட்டு மரங்கள் நேற்று கடலுக்குள் செல்லவில்லை.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட தமிழக மீன்பிடி துறைமுகங்களில் பைபர் படகுகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீன் வரத்தும் வெகுவாக குறைந்தது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கி நேற்று காலை 5 படகுகள் கவிழ்ந்தன.

மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கடலைக் கண்காணித்தபடி உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X