மங்களூரில் ஏர் இந்தியா விமான விபத்து - 159 பேர் பலி - 125 உடல்கள் மீட்பு

துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர்இந்தியா விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 159 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.
விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15 மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது. காலை 6.03 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம், ரன்வேயை விட்டு விலகி ஓடி விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் வெடித்துச் சிதறியது. விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
விமானத்தில் 105 ஆண்கள், 32 பெண்கள், 19 சிறார்கள் என மொத்தம் 160 பயணிகள் இருந்தனர். இவர்கள் தவிர நான்கு கைக்குழந்தைகளும், ஆறு ஊழியர்களும் விமானத்தில் இருந்தனர்.
மும்பையிலிருந்து ஒரு மீட்பு விமானம் மங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 60 சதவீதம் பேரின் உறவினர்களைத் தொடர்பு கொண்டுள்ளோம். டெல்லி, மங்களூர், சென்னை, பெங்களூர், துபாய் ஆகிய நகரங்களில் ஹெல்ப்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஒருவர் பலி
இந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்து உயிருடன் தப்பினர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பிற்பகல் வாக்கில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 159 ஆக உயர்ந்தது.
125 உடல்கள் மீட்பு
விபத்து நடந்த இடத்தில் தற்போது உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயுள்ளன. மாலை 5 மணி வரை நிலவரப்படி 125 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களை அடையாளும் காணும் பணிகள் நடந்து வருகின்றன.
போயிங் குழு வருகிறது
விபத்தில் சிக்கியது பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட போயிங் விமானமாகும். எனவே பிரான்சிலிருந்து போயிங் நிறுவன குழு ஒன்று ஆய்வுக்காக இந்தியா வருகிறது.












Click it and Unblock the Notifications