கோவையில் கருணாநிதி-21 குழுவினருடன் ஆலோசனை

பின்னர் மாநாட்டு பணிகளையும் நேரில் பார்வையிட்ட முதல்வர் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோவையில் அடுத்த மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை சென்று மாநாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
ஜூன் மாதம் முதல் வாரத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விட வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய கருணாநிதி இன்று சிறப்பு விமானத்தில் கோவை புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் தயாளு அம்மாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கனிமொழி எம்.பி., டி.ஜி.பி. லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர்.
9.45 மணிக்கு கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ரெசிடென்சி ஹோட்டலில் செம்மொழி மாநாட்டு குழுக்களின் 21 தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு நேரில் சென்று பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். பணிகளை விராவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
பின்னர் கண்காட்சி அரங்கம், ஆய்வரங்க பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். கோவையில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் சாலைப் பணிகளையும் நடைபாதை பணிகளையும் ஆய்வு செய்தார்.
வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கும் பணிகளையும், ஊர்வல பாதை, தலைவர்கள் நின்று ஊர்வலத்தை பார்வையிடும் இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார். இரவு கோவையில் தங்கும் அவர் நாளை சென்னை திரும்புகிறார்.
கோவை சென்ற காங். எம்எல்ஏ விபத்தில் சிக்கினார்:
இதற்கிடையே வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் சாலை விபத்தில் காயத்துடன் உயிர் தப்பினார்.
கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான குழுவில் உறுப்பினராக ஞானசேகரன் உள்ளார். அவர் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்றிரவு 10 மணிக்கு வேலூரில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தண்டுக்காரன்பட்டி என்ற இடத்தில் இவரது காரி மீது எதிரே கல்யாண கோஷ்டி வந்த மினி வேன் மோதியது.
இதில் கார் கண்ணாடி உடைந்து ஞானசேகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
வேனில் வந்தவர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டது. வேனின் டிரைவர் கோபிக்கு கால் ஒடிந்து மயக்கமடைந்தார். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஞானசேகரன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் வேலூருக்கே திரும்பி சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் உடல்நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications