டாஸ்மாக் சரக்கைவிட கள் 'பெட்டர்'!-பாஜக
சென்னை: கள் இறக்க அனுமதி கோரி கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நடத்தும் போராட்டத்துக்கு பாஜக வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மது விற்பனையில் முதல் மாநிலமாக, போதைக்கு அடிமையானவர்களை அதிகமாகக் கொண்டிருப்பதில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியே தீருவது என்பதில் தமிழக அரசு தீவிரமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு வருகிறது.
தினமும் காலை 8 மணிக்கே மதுக் கடைகளை திறந்து வைத்து இரவு 10 மணி வரை மது விற்பனையில் ஈடுபடுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி தினங்களில் கூட கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதும் நிச்சயம் மக்கள் நல அரசுக்கு இலக்கணமல்ல.
பள்ளிகள், கல்லூரிகள் கூட 8 மணி நேரம்தான் இயங்குகின்றன. ஆனால் டாஸ்மாக் கடைகளோ 14 மணி நேரம் இயங்குகின்றன.
ஆல்கஹாலை எடுத்துக் கொள்ளும் ஒருவர் குறைந்தபட்சம் 70 ரூபாயாவது இருந்தால்தான் டாஸ்மாக் கடை பக்கம் நெருங்க முடியும். நமது நாட்டில் 41 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். இவர்களின் தினசரி வருமானம் 100 ரூபாய்க்கும் குறைவானது. இந்த அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள்தான் அதிக அளவில் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுகின்றனர்.
இதன்மூலம் நமது மாநிலத்தின் மனித ஆற்றல் பெருமளவில் பாழ்படுத்தப்படுவதோடு குடும்பங்களும் சீர்குலைந்து வருகின்றன. இதன்மூம் அந்த குடும்பங்களில், வேலைக்குச் சென்றால் மாத்திரமே குடும்பம் நடத்த முடியும் என்ற நிலைக்கு நெருக்கப்படுகின்றனர். அத்தகையவர்களால் தங்களது குழந்தைகளுக்கு தரமான வாழ்க்கையை எவ்வாறு உருவாக்கித் தர முடியும்?.
அரசின் வருவாயில் ஏறக்குறைய 25 சதவீதத்தை கொண்டிருக்கும் நிறுவனமாக டாஸ்மாக் உருவாக்கப்பட்டுள்ளது.
தனது கடைசி ஆண்டை இந்த ஆட்சி தொட்டு விட்டது. தற்போதாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. ஆட்சியாளர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் குறைந்தபட்சம் கள் இறக்குவதையும், விற்பதையுமாவது அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் ஏழைகளின் பணம் கொஞ்சமாவது மிச்சமாகும்.
கள் இறக்க அனுமதி கோரி வரும் 27ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை கொங்குநாடு முன்னேற்றப் பேரவை அறிவித்திருக்கிறது. கள் இறக்க தற்போதுள்ள தடையை நீக்க இந்த போராட்டம் தூண்டுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போராட்டம் வெற்றி பெற பாஜக வாழ்த்துகிறது.
அதே நேரத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆராய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
ராசாவின் இலாகாவை மாற்ற கோரிக்கை:
இந் நிலையில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் இலாகாவை மாற்ற வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால் மத்திய அமைச்சர் ராசாவுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராசாவை நீக்கும் அதிகாரம் பிரதமரிடம் இல்லை என்று தெரிகிறது. அப்படியானால் அவரது இலாகாவையாவது பிரதமர் மாற்றலாமே. இதேபோல ராகுல் காந்தி திறமையானவர், நிர்வாகத் திறன் படைத்தவர் என்று புகழாரம் சூட்டி வருகிறார் பிரதமர். அப்படி ராகுல் காந்தி திறமையானவர் என்றால் அவரை அமைச்சரவையில் பிரதமர் சேர்த்திருக்க வேண்டும். அவரது திறமையான நிர்வாகத்தை இந்த நாடும் பார்க்கட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications