பஸ் டிரைவரை தாக்கிய கால்சென்டர் ஊழியர்!
சென்னை: சென்னை அம்பத்தூர் பஸ் டெப்போவில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய கால்சென்டர் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் எஸ்டேட் பஸ் டெப்போ அருகே நேற்றிரவு 10 மணியளவில் கால்சென்டர் ஊழியரான இப்ராகிம் என்பவர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 65 பி மாநகர பஸ் டிப்போவுக்குள் வந்தது.
வழியில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த இப்ராகிமை ஓரத்தில் நிற்குமாறு டிரைவர் ஆறுமுகம் கூறினார். ஆனால் அவர் நகர மறுத்தார். இதனால் டிரைவருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியானது.
இப்ராகிம் தாக்கியதில் ஆறுமுகம் காயமடைந்தார். இதனால் மற்ற டிரைவர்கள் இப்ராகிமை முற்றுகையிட்டு தாக்கினர்.
இந்த சம்பவத்தையடுத்து டெப்போவில் இருந்து பஸ்களை எடுக்க டிரைவர்கள் மறுத்துவிட்டனர். சம்பவம் குறித்து அறிந்து போலீசார் அங்கு வந்து பஸ்களை இயக்குமாறு டிரைவர்களிடம் கூறினர். ஆனால், இரவு 11 மணி ஆகியும் பஸ்களை இயக்காததால் கோபமடைந்த மக்கள் ஆத்திரமடைந்து கல்வீச்சில் இறங்கினர்.
இதில் உதவி போலீஸ் கமிஷனர் குமாரவேல், சப்-இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து புறநகர் கமிஷனர் ஜாங்கிட் விரைந்து வந்தார். டிரைவர்களுடன் பேச்சு நடத்திய அவர் இப்ராகிமை கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த மோதலால் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இரவில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications