ஏர் இந்தியாவுக்கு ரூ 12 கோடி நஷ்டம் ஏற்படுத்திய ஸ்ட்ரைக்!
டெல்லி: இரண்டு நாள்களாக ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் புதன்கிழமை மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த திடீர் ஸ்ட்ரைக்கால் ஏர் இந்தியாவுக்கு ரூ 12 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் பயணிகள் பெரும் தவிக்குள்ளாகினர்.
விமானப் பாதுகாப்பு குறித்தும், ஊழியர்களின் பிரச்னைகள் குறித்தும் தொழிற்சங்கத் தலைவர்கள் பத்திரிகைகளிடம் பேசக் கூடாது என சுற்றறிக்கை மூலம் ஏர் இந்தியா அறிவுறுத்தியது.
இந்த சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா ஊழியர்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், 140-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டன. விடுமுறை காலம் என்பதால் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் ரூ.12 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே பெரும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது ஏர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு தெரிவித்தார்.
இதையடுத்து 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே, வேலைநிறுத்தத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய தேசிய விமான போக்குவரத்து நிறுவனம் வழக்கு தொடர்ந்து.
விடுமுறை காலத்தில் திடீரென வேலை நிறுத்தம் மேற்கொள்வது பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் எனக் கூறி மே 31 வரை ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்க மண்டலச் செயலர் விவேக் ராவ் பின்னர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications