சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் படுகொலை
சென்னை: சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் சேரன் தனது வார்டு அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிச் சாய்த்தது.
சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பொ.மா.சேரன் (44), 89வது வட்ட திமுக செயலாளராகவும், 93வது வட்ட மாநகராட்சி கவுன்சிலராகவும் இருந்தார்.
இவர் தினமும் காலை 9 மணி அளக்கு ராயப்பேட்டை பாலாஜி நகர் 3வது தெருவில் உள்ள மாநகராட்சி 93வது வார்டு அலுவலகத்துக்கு வருவது வழக்கம். அங்கு தினமும் மக்களை சந்திப்பார்.
இன்றும் வழக்கம்போல் வார்டு அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் சேரனுடன் பேசிக் கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தபோதே அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 6 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து சேரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சேரனை அவரது மனைவி அருண்மொழி சம்பவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர்கள் வசந்தகுமாரி, ரவீந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பல்லாமணி, சார்லஸ், கார்த்திக் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து துணை கமிஷனர் பெரியய்யா கூறுகையில், 93வது வட்டத்தில் கட்சிப் பதவி வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதா, அல்லது இப்பகுதியில் உள்ள காலி மனை ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக கொலை நடந்ததா என்று விசாரித்து வருகிறோம்.
கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலையால் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications