நாடாளுமன்றம்-சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: அத்வானி வலியுறுத்தல்
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் அனைத்து மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாஜக தலைவர் அத்வானி வலியுறுத்தினார்.
பிரதமரை அத்வானி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய மக்களின் பெயர்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பட்டியலில் இடம்பெற்று வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
மேலும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் அமையும்போது அதன் பதவிக் காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இடையில் கலைக்கவே முடியாத வகையில் சட்டரீதியிலான மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின் 1952, 1957, 1962, 1967 போன்ற ஆண்டுகளில் நாடாளுமன்றம் தனது முழுமையான 5 ஆண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்ய வில்லை. அந்த காலகட்டங்களில் பல மினி பொது தேர்தல்கள் நடந்தன. இதுபோல பல மாநிலங்களிலும் சட்டசபைகள் இடையிடையே கலைக்கப்பட்டு திடீர் தேர்தல்கள் நடந்துள்ளன. எதிர்காலத்தில் இதைத் தடுக்க அரசியல் சட்ட மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அத்வானி கூறினார்.
மேலும் நாடு முழுவதும் சட்டசபைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications