மாற்றுத் திறனாளிகளை மருத்துவமனையில் சந்தித்த கருணாநிதி-உண்ணாவிரதம் வாபஸ்
சென்னை: ஆசிரியர் பணியிடங்கள் வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து முதல்வர் கருணாநிதி வாக்குறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று அவர்கள் அனைவருக்கும் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு ஆசிரியர் பள்ளியில் படித்த 72 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்கக் கோரி கடந்த 26ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மாற்றுத் திறனாளிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன் தினம் இரண்டாவது நாளாக அவர்களது உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதனால் மயக்கமடைந்த பலரை இரவிலேயே போலீஸார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பெற மறுத்து, மருத்துவமனை வளாகத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந் நிலையில், நேற்று காலை முதல்வர் கருணாநிதி, அரசு மருத்துமனைக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பேசினார். அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு வாரத்தில் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.
முதல்வரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
ஒரே பள்ளியில் படித்த சிலருக்கு மட்டும் வேலை வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்தே போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
72 பேருக்கும் ஆசிரியர் பணி-கருணாநிதி உத்தரவு:
இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பூவிருந்தவல்லி சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையத்தில் 2005-2006ம் ஆண்டு முதல் 2008-2009 வரையுள்ள காலத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து பணி நியமனம் கிடைக்காமல் உள்ள மாற்றுத் திறனாளிகள் 72 பேர் தங்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்களில் சிலர் நலிவுற்று சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்த தகவலை நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் செய்தி ஏடுகள் வாயிலாக அறிந்து மிகவும் வேதனையுற்ற முதல்வர் கருணாநிதி, காலை உணவு கூட உட்கொள்ளாமல் உடனடியாக அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று,
உண்ணாவிரதம் இருந்த கை-கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கையை ஒருவார காலத்தில் நிறை வேற்றுவதாக அவர்களிடம் உறுதி அளித்தார்கள். அதனை தொடர்ந்து அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு வீடு திரும்பினார்கள்.
முதலமைச்சர் கலைஞர் மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வாக்குறுதி அளித்த அன்றே, அதாவது, 28.5.2010 அன்றே ஆணையிட்டார்கள்.
அதன்படி 2005-2006 முதல் 2008-2009 வரையிலான காலத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த கை, கால் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகள் 72 பேருக்கும் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் விதிகளைத் தளர்த்தி இடைநிலை ஆசிரியர்களாகப் பணி நியமனம் வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications