சொத்து குவிப்பு வழக்கு தாமதத்துக்கு திமுக தான் காரணம்-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல் கிடைக்கவில்லை என்று எனது வழக்கறிஞர் 25.5.2010 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவித்ததாக கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறானது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்ததே எனது வழக்கறிஞர்தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மேலும், முன்பு எனக்காக வாதாடிய வழக்கறிஞர் கருணாநிதியுடன் தற்போது கைகோர்த்துவிட்டதால், அவரிடமிருந்து பெறப்பட்ட வழக்கு ஆவணங்களை முழுமையாக நம்பி வழக்கை நடத்துவதில் சிரமங்கள் இருப்பதால், என்னுடைய வழக்கறிஞர் வழக்கு ஆவணங்களின் நகல்களை அளிக்குமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த நகல்கள் கிடைக்கப் பெறவில்லை என்று தான் எனது வழக்கறிஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் தெரிவித்தாரே தவிர, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கவில்லை. இதிலிருந்து வழக்கின் விவரம் புரியாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
இது போன்றதொரு கோரிக்கையை வழக்கறிஞர்கள் வைப்பதும், வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைப்பதும் நடைமுறையில் உள்ள ஒன்று தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, இது குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டு, நீதிமன்ற அவமதிப்பை செய்தது போல் அமைந்துள்ளது.
கடைசியாக, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று நான் தாக்கல் செய்த மனுவினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்தவுடன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து, அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தவுடன், மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக எனது வழக்கறிஞர் சொல்வதைப் பார்த்தால், இந்த வழக்கை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்பது தான் திட்டம் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒருங்கிணைத்து விசாரிக்கவேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு செல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனை மனுத்தாக்கல் செய்யச் சொன்ன கருணாநிதி, இப்போது இது பற்றி பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
தன்னுடைய விருப்பப்படி இந்த வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார் போலும்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யாக புனையப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று 2003ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த அன்பழகனால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும், சொத்துக்குவிப்பு வழக்கையும் லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒருங்கிணைத்து பெங்ளூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தவை எதிர்த்து 2005ம் ஆண்டு இதே அன்பழகனால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தான், இந்த வழக்கு இவ்வளவு கால தாமதப்படுத்தப்படுவதற்கு காரணம் என்று நான் விரிவாக விடுத்த அறிக்கைக்கு கருணாநிதி பதில் அளிக்காததிலிருந்தே, இந்த வழக்கு யாரால் தாமதப்படுத்தப்பட்டது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications