பாளை சிறையில் போலீசார்-கைதிகள் பயங்கர மோதல்
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் நேற்றிரவு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் கைதிகள், காவலர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1600க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உள் சிறையில் 10 பிளாக்குளில் தண்டனை கைதிகளும், வெளி சிறையில் உள்ள 3 பிளாக்குகளில் விசாரணை கைதிகளும் உள்ளனர்.
கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்ததை அடுத்து 1998-ம் ஆண்டுக்கு பிறகு கைதிகள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டு தனி தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கைதிகளுக்கு இடையே செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தராளமாக புழங்கி வருகின்றன.
இதனால் சிறை அதிகாரிகள் மற்றும் கமண்டோ படையினர் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். கைதிகளை பார்க்க வருகிறவர்கள், கோர்டுக்கு சென்று வரும் கைதிகள் ஆகியோர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் குறைந்தபாடில்லை.
கைதிகள் தினமும் காலை 6 மணிக்கு திறந்து விடப்பட்டு மாலை 6 மணிக்கு செல்லில் அடைக்கப்படுகின்றனர்.
இந் நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வெளிச் சிறையில் உள்ள கைதிகள் செல்லில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இரவு புதுக் கட்டிடத்தில் உள்ள 2வது பிளாக்கில் துணை சிறை அலுவலர் சேகர் தலைமையில் சிறை காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த கைதிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் காவலர்கள், கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கைதிகள் ஓன்று திரண்டு காவலர்களை தாக்க முயன்றனர்.
இதையடுத்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட கைதிகளை உதைத்ததாகத் தெரிகிறது.
தகவல் அறிந்ததும் சிறை அலுவலர் அமிர்தலால் தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். காவலர்கள் தாக்கியதில் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் சிறைவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications