ஆந்திரா காங். அமைச்சரவையில் சிரஞ்சீவி கட்சி!
ஹைதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டியை ஒடுக்க ஆந்திர அமைச்சரவையில் சிரஞ்சீவியின் கட்சியை சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவியை சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா டெல்லிக்கு அழைத்துப் பேசினார்.
அப்போது ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது கட்சியின் ஆதரவை சோனியா கோரியதாக சிரஞ்சீவி தெரிவித்தார். காங்கிரசில் சேரும் திட்டம் ஏதும் இல்லை என்றும், சோனியாவும் அது குறித்து தன்னுடன் பேசவில்லை என்றும் கூறினார்.
ஆனால், அந்த சந்திப்பின்போது ராஜ்யசபா தேர்தலைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் கூட்டாக செயல்படலாம் என்றும், காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு அமைச்சர் பதவிகள் தரப்படும் என்றும், சிரஞ்சீவியை அமைச்சராக்கவும் தயார் என்றும் சோனியா கூறியுள்ளதாக் தெரிகிறது.
மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து முதல்வர் பதவிக்கு குறி வைத்து வருகிறார். தனக்கு முதல்வர் பதவி தராவிட்டால், தனிக் கட்சி தொடங்கவும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை வெளியில் இழுத்து மாநிலத்தில் முதல்வர் ரோசைய்யா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கவும் தயாராகி வருகிறார்.
இதை சமாளிக்கவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் 14 சதவீத வாக்குகளைப் பெற்று 18 இடங்களைக் கைப்பாற்றிய சிரஞ்சீவிக்கு காங்கிரஸ் வலைவீசி வருகிறது.
ஆந்திராவில் 2014ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் முதலில் சிரஞ்சீவிக்கு அமைச்சரவையில் இடம் தந்தும், பின்னர் கட்சியையே காங்கிரசுடன் இணைக்கவும் செய்துவிடலாம் என்று சோனியா கருதுகிறார். இதன்மூலம் ஜெகன் மோகன் எதிராக பலமான தலைவர் ஒருவரையும் கட்சியில் உருவாக்கி, 'செக்' வைக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
சோனியாவை சந்திக்க ஜெகன் மோகன் முயற்சி:
இதற்கிடையே டெல்லியில் சோனியாவை சந்திக்க ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக முயன்று வருகிறார்.
அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு தரப்பினர் வற்புறுத்தி வருகின்றனர். இந் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் தவறு செய்ததாக நிரூபித்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலக தயாராக இருக்கிறேன். நடந்த விஷயங்கள் பற்றியும் என்னுடைய நிலை குறித்தும் மேலிட தலைவர்களிடம் விளக்கு வதற்காகவே டெல்லி வந்துள்ளேன்.
சோனியாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரிடம் எல்லாவற்றையும் விளக்குவேன் என்றார்.
ஆனால், அவரை சோனியா சந்திப்பாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications