இன்று புகையிலை எதிர்ப்பு தினம்: சிகரெட் விற்பனை இல்லை-வணிகர் சங்கம்
சென்னை: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை (மே 31) முன்னிட்டு இன்று சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி புகையிலைப் பொருள்களின் தீமை மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வர்த்தகர்கள் கலந்து கொண்ட கருத்தரங்குக்கு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் தலைவர் வெள்ளையன், உலக புகையிலை எதிர்ப்பு தினமான திங்கள்கிழமையன்று சிகரெட் உள்பட புகையிலைப் பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பல இடங்களில் கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படவில்லை. கடைகள் முன் இன்று 'சிகரெட் விற்பனை இல்லை' என்ற போர்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
ஆனால், பெரும்பாலான இடங்களில் வி்ற்பனை வழக்கம்போல் நடந்தது.
சிகரெட் மீது அதிக வரி-அன்புமணி கோரிக்கை:
புகையிலை பேராபத்திலிருந்து எதிர்கால தலைமுறையினரை காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புகையிலை தீமையை கட்டுப்படுத்துவதற்கு உலக நலவாழ்வு அமைப்பு பரிந்துரைத்துள்ள 6 வழிமுறைகளை அமலாக்க வேண்டும்.
இதுதொடர்பாக இந்தியாவில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள புகையிலை கட்டுப்பாட்டு சட்ட விதிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
பொது இடங்களிலும், பணி இடங்களிலும் புகை பிடிப்பதை தடை செய்யும் ஆணையை செயல்படுத்த வேண்டும். உலக நலவாழ்வு அமைப்பும், உலக வங்கியும் பரிந்துரைத்துள்ளபடி புகையிலை பொருட்கள் மீது அதிக அளவு வரி விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications