2013 வரை காத்திருக்குமா பாமக?-திமுக கூட்டணி குறித்து இன்று முடிவு

திமுக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியதையடுத்து அந்தக் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்கத் தயார் என்றும், வரும் சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் உடன்பாடு கண்டு தேர்தலில் போட்டியிடலாம் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவி்த்துள்ளார்.
அதே நேரத்தில் பாமகவுக்கு இம்முறை ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கையை கருணாநிதி நிராகரித்துவிட்டார். 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிந்த பின் ராஜ்யசபா சீட் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது அடிக்கடி கூட்டணி மாறும் பாமகவுக்கு திமுக வைத்துள்ள நம்பத்தன்மை குறித்த சோதனையாகக் கருதப்படுகிறது.
பாமக தலைவர்கள் அதிருப்தி:
இது பாமகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களில் எதிலுமே பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ராஜ்யசபாவில் அன்புமணி மட்டுமே நாடாளுமன்றத்தில் பாமகவின் பிரதிநிதியாக இருந்தார்.
இப்போது நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் இடம் கிடைக்காமல் போனால், நாடாளுமன்றத்தில் பாமகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.
2013 வரை காத்திருக்க வேண்டும்:
2011க்குப் பிறகு வரும் ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு ஓர் இடம் தரப்படும் என்று திமுக கூறினாலும் தமிழகத்தில் 2013ம் ஆண்டு ஜூலையில் தான் கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் முடிகிறது.
அப்போதுதான் அடுத்து ராஜ்யசபா தேர்தல் வரும். அது வரை பாமகவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்று அந்தக் கட்சி வருந்துகிறது.
இதனால் 2013 வரை மிகவும் அமைதியான தோழமைக் கட்சியாகத்தான் பாமக இருந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கும் பாமக ஆளாகும்.
மேலும், அன்புமணியை ராஜ்யசபா உறுப்பினராக்கிவிட்டால், மீண்டும் காங்கிரசிடம் பேசி எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியை அவருக்கு வாங்கிவிடலாம் என்றும் பாமக நினைத்திருந்தது. ஆனால், அந்த எண்ணத்தை திமுக கலைத்துவிட்டது.
அன்புமணி வீட்டில் ஆலோசனை:
திமுக நேற்றிரவு இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் சென்னையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் வீட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர். ஆனால், பத்திரிக்கைகளுக்கு இது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் தான் இன்று பாமக நிர்வாக குழுக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார். மாநில முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பிக்கள் ஆகியோருக்கு அவசர அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
2011 சட்டசபை தேர்தலில் கூட்டணி, மாநிலங்களவையில் 2013ல் தான் இடம் என்ற நிபந்தனையை பாமக ஏற்கப் போகிறதா அல்லது அதிமுகவுக்கு தூது அனுப்பி அந்த அணியில் இடம்பெற முயற்சி எடுக்கப் போகிறதா என்று தெரியவில்லை.
பாமகவினர் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் வரும்வரை கூட்டணி விஷயத்தில் பொறுத்திருக்கலாம், திமுகவுக்கு எந்த உறுதி மொழியும் தர வேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்படலாம் என்றனர்.












Click it and Unblock the Notifications