அரபிக் கடலில் உருவாகியுள்ள 'ஃபெட்' புயல் நாளை குஜராத்தில் கரை கடக்கும்
அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகியுள்ள ஃபெட் புயல் மேலும் வலுவடைந்து குஜராத் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை...
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஃபெட் புயல், மேலும் வலுவடைந்து, தீவிரப் புயலாக மாறி, இன்று காலை 5.30 மணிநிலவரப்படி வட மேற்கு திசையில் நகர்ந்து மையம் கொண்டிருந்தது.
மும்பைக்கு மேற்கு தென் மேற்கே 1200 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் நலியாவுக்கு 1000 கிலோமீ்ட்டர் தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சிக்கு தென் மேற்கே 1000 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தப் புயல் நிலை கொண்டுள்ளது.
தற்போதைய நிலைகளின்படி இது மேலும் வலுவடைந்து, வடக்கு வட மேற்கு மற்றும் வடக்கு திசையில், குஜராத் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் கரையை நோக்கி நகரத் தொடங்கும். நாளை இப்பகுதிகளில் ஒன்றில் அது கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் தன்மை காரணமாக குஜராத் கடலோரப் பகுதிகளில் பரவலாக கன மழையும், சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். ஜூன் 4ம் தேதி முதல் மழையின் அளவு அதிகரிக்கும். மேலும் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும்.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் ஜூன் 3ம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications